சுதந்திரக் கட்சி வேட்பாளராக மைத்திரியை நிறுத்த ஏகமனதாக தீர்மானம் -மஹிந்த அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அவை தோல்வியடையுமானால் சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதென தீர்மானித்துள்ளது. சின்னம் ஒரு பிரச்சினையல்ல. வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே எமது நோக்கமாகும்.

பெரமுன கட்சியுடனான பேச்சுவார்த்தை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எனினும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் வேட்பாளரை நிறுத்தும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. இரு கட்சிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் கொள்கையளவில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. சின்னம்தொடர்பிலேயே தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்தத் தகவலை மஹிந்த அமரவீர வெளியிட்டார்.