இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல்: பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொள்வாரா ?

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நேதயாகு, தனது அரசுக்கான பெரும்பான்மை பலம் குறைந்ததையடுத்து, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அதன்படி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 

நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். மக்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதால் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘புளூ அண்ட் ஒயிட்’ கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி இருந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவில், நேதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 120 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில், நேதன்யாகு கட்சி 55 முதல் 57 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது. 
பென்னி கன்ட்சின் புளூ அண்ட் ஒயிட் கட்சியும் பெரும்பான்மைக்கு தேவையான 66 இடங்களை பெறுவது சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிக்தார் லிபர்மேனின் இஸ்ரேல் பெட்டினு கட்சி 8 முதல் 10 இடங்களைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி வாக்கு எண்ணிக்கை நிலவரம் அமைந்தால், யார் வலுவான கூட்டணியை அமைக்கிறார்களோ அவர்களே ஆட்சியை கைப்பற்ற முடியும். நாட்டின் நீண்டகாலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நேதன்யாகு வலுவான கூட்டணியை அமைத்து பிரதமர் பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.