புதிய ஆலோசகரை நியமித்த அமைச்சர் றிசாட்

 

கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர்  மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசகராக கலாநிதி எம் .எஸ். அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விசேட துறையில் சிறப்பு பட்டம் பெற்ற கலாநிதி. அஸீஸ், வவுனியா பாவற்குளத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

 

ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர்,  கியோட்டா தோசிசா பல்கலை கழகத்தில் சர்வதேச உறவுக்கொள்கையில் கலாநிதி பட்டம் பெற்றவர். ஜப்பானில் சிறிது காலம் வருகை விரிவுரையாளராக  பணியாற்றிய இவர் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்ட பின் படிப்பு கற்கை நெறி விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றார். அத்துடன் பண்டார நாயக்கா சர்வதேச கற்கை நிலையத்தில்  விரிவுரையாளராகவும் பணி புரிகின்றார்.

 

அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா தலைமையேற்று வழி வழிநடத்தி வரும்  இன நல்லுறவு மற்றும் சமாதான கற்கை நெறியின் இணைப்பாளராகவும் இவர் பணிபுரிகின்றார்.

 

வவுனியா பட்டாணிச்சூர் முஸ்லிம் தேசிய பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்ற இவர் கா.பொ .த சாதாரண தர , உயர் தர கல்வியை குருநாகல் பாணகமுவ அல் நூர் முஸ்லிம் தேசிய பாடசாலையிலும்  பெற்றார்.

 

இவர் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி அனீசின் சகோதரர்.