கருணாநிதி தொடர்ந்தும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக ஸ்டாலின் தெரிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டு பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பதற்றம் குறைந்தது.

இந்நிலையில், இன்று வழக்கம் போல் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துமனை சார்பில் எவ்வித அறிக்கையும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. தற்போது மருத்துவமனையில் இருந்த புறப்பட்ட தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படியே கருணாநிதி தற்போதும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக தெரிகிறது.

முக ஸ்டாலினை தொடர்ந்து துரை முருகனும் செய்தியாளர்களை சந்தித்தார். அவரும் கருணாநிதி தீவிர கண்காணிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.