IPL சென்னை சூப்பர் கிங் அணியை வெற்றி கொள்ளுமா ராஜஸ்தான் ராயல்ஸ் ?

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவை 127 ரன்களில் கட்டுப்படுத்தி அசத்திய சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடருவதில் தீவிரம் காட்டும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிட்டினால் சென்னை அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும்.

அம்பத்தி ராயுடு (423 ரன்), கேப்டன் டோனி (27 சிக்சருடன் 360 ரன்), ஷேன் வாட்சன் (328 ரன்), சுரேஷ் ரெய்னா (261 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கேப்டன் டோனியின் இறுதிகட்ட ஷாட்டுகள் ரசிகர்களை சிலிர்க்க வைக்கின்றன. இவர்களின் ஆதிக்கம் நீடித்தால், எதிரணியால் சமாளிப்பது கடினம் தான். தசைப்பிடிப்பால் கடந்த 12 நாட்களாக ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டதை காண முடிந்தது. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இவ்விரு அணிகளும் புனேயில் சந்தித்த ஆட்டத்தில் சென்னை அணி ஷேன் வாட்சனின் சதத்தின் உதவியுடன் ராஜஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது நினைவு கூரத்தக்கது.

10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வி என்று 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள ராஜஸ்தான் அணி எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதாவது இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா? சாவா? மோதல் ஆகும்.

தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்று இருந்த ராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் புதுதெம்பு அடைந்துள்ளது. சொந்த ஊரில் களம் காண்பது ராஜஸ்தானுக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். பேட்டிங்கை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் (332 ரன்), ஜோஸ் பட்லர் (320 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலை போல் நம்பி இருக்கிறது. கேப்டன் ரஹானேவின் பேட்டிங் நிலையானதாக இல்லை. இதே போல் ரூ.12½ கோடிக்கு விலை போன ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும் (10 ஆட்டத்தில் 174 ரன் மற்றும் 3 விக்கெட்) தங்கள் அணியை தூக்கி நிறுத்த வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.

ராஜஸ்தான் வீரர்கள் வழக்கமாக ஊதா நிற உடை அணிந்து விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிரத்யேகமாக இளஞ்சிவப்பு (பிங்க்) சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள்.

ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 12-ல் சென்னையும், 6-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.