தேசிய அரசாங்கத்தின் பயணமானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது : நாடாளுமன்றில் தயாசிறி உரை

தேசிய அரசாங்கத்தின் பயணமானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது. அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் கலைக்கப்படும், இப்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அந்நேரம் எம்முடன் வந்து இணைவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் சம உரிமைகள் இருக்கும் எனவும் வேலைத்திட்டங்கள் சமமாக முன்னெடுக்கப்படும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. 

எனினும் சுதந்திரக் கட்சியை புறக்கணித்தே ஐ.தே.க.வினர் அதன் பொருளாதார கொள்கைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்கினர்.

நாம் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாத காரணத்தினாலேய அதனை விமர்சிக்க ஆரம்பித்தோம். அத்துடன் மத்திய ஊழல், பொருளாதார செயற்பாடுகளில் இலங்கைக்கு பொருந்தாத நகர்வுகள் என்பவற்றை கருத்தில் கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கினோம். 

தற்போது தேசிய அரசாங்கத்தில் 23 சு.க. உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களளுடன் நாம் முரண்படவில்லை, தேசிய அரசாங்கமானது 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்காது அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் கலைக்கப்படும், இப்போது தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பனர்கள் அந்நேரம் எம்முடன் வந்து இணைவார்கள்.

மேற்கு நாடுகளின் நோக்கத்தை நிறைவேற்றுக்கொள்ளவே இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.