அமைச்சர் றிஷாத்துடன் இணைவாரா முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் ?

அஹமட் இத்ரீஸ் – ஏறாவூர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமடை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ரிசாத் பதியுத்தீன் அவர்களுடன் இணைந்து சமூகத்திற்கான அரசியல் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  ஏறாவூர் நகரத்தை சேர்ந்த சமூகநல இயக்கங்களின் பிரதிநிதிகள் ஹாபீஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் இது தொடர்பில் எழுத்து மூலம் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாகவும் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

மாகாணசபையின் முதலமைச்சராக இருந்து பதவி காலாவதியானதன் பின்னர் தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்குவதாக ஹாபீஸ் நஸீருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரினால் இழுத்தடிக்கப்படுவதாகவும், எனவே ஹக்கீமை தொடர்ந்தும் நம்புவதில் எந்த விதமான பிரயோசனமும் இல்லையெனவும் ஹாபீஸ் நஸீரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசியப்பட்டியல் எம்.பி பதவியை காட்டி கட்சியில் ஏற்பட்டுள்ள உடைவுகளை ஹாபீஸ் நஸீர் அஹமட்டை பயன்படுத்தி  சரி செய்வதற்கான உத்தியாகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  இந்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் ஹக்கீமை எந்த காலத்திலும் நம்ப வேண்டாம் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் ஹாபீஸிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் ரிசாத்தின் கட்சியில் இணைந்து எதிர்வரும் மாகாண சபையில் தேர்தலில் போட்டியிடுமாறு இதன் மூலமே ஏறாவூர் மக்களுக்கு விமோசனம் கிடக்குமென்று அவர்கள் அழுத்தமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவராக இருந்து கட்சியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் ஹக்கீம் தனது அமைச்சின் மூலம் எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்யவில்லை எனவும் ஹாபீஸ் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அதிதிகளாக வந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் வெறுமென பிரமையை ஏற்படுத்தி சென்றது ஹக்கீம் இதுவரை காலமும் தமக்கு செய்த நன்மை என அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.  தமது அன்பான கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து நல்ல முடிவினை மேற்கொள்ளுமாறு ஹாபீஸ் நஸீரிடம் ஏறாவூர் மக்கள் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.