அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக அமைச்சர் தயா கமகே…

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டை நிலைகுலையச் செய்யும் நோக்கில் நேற்று இரவு ஒரு சில குழுவினரால், அம்பாறை பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலும், சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை குலைக்கும் நோக்கில் இந்த சதிகார்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் சதிகாரர்களின் வலையில் சிக்கிவிட வேண்டாம் சிந்தித்து செயற்படுமாறு தேசப்பற்றுள்ள அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வாகனங்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.இன்று அதிகாலை 1.00 மணி வரை, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சில குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.