முஸ்லிம் காங்கிரஸிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் தேர்தலில் நல்ல பாடம் புகட்டி உள்ளனர்:எம்.எஸ்.உதுமாலெப்பை

 

எம்.ஜே.எம்.சஜீத். 

கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தல்களிலும் இனவாத உறவுகளையும், பிரதேச வாதங்களையும் உருவாக்கி வாக்குகளைப் பெற்று மொத்த வியாபாரம் மேற்கொண்ட முஸ்லிம் காங்கிரஸிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நல்ல பாடம் புகட்டி உள்ளனர். என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். தேசிய காங்கிரஸின் கூட்டம் றகுமனியாபாத் பிரதேசத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றுகையில் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
அம்பாறை மாவட்டம் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  இதயமாக திகழ்தன இம்மக்களின் வாக்குகளை இனவாத கருத்துகளையும், பிரதேசவாத உணர்வுகளையும் தேர்தல் காலத்தில் ஏற்படுத்தி வாக்குகளை பெற்றுச் செல்லும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் தங்களின் உணர்வுகளை வாக்குரிமை ஊடாக வழங்கியுள்ளனர்.
நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டைகளாக இருந்து வந்த கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம், அட்டாளைச்சேனை போன்ற பிரதேச சபைகளில் முஸ்லிம் காங்கிரஸினால் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலமை வரலாற்றில் முதலாவது தடவையாக அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அடுத்த நாள் முஸ்லிம் காங்கிரஸிக்கு வாக்களித்த மக்கள் தோல்வியடைந்த நிலமையே தொடர்கிறது. இதே நிலமை தான் 2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தொடர்கிறது.
கடந்த 2011 ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 68.41 வீத வாக்குகளை பெற்றது. 2018 ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசும் கூட்டிணைந்து போட்டியிட்டு 47.3 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது. 2011 ம் ஆண்டில் தனியாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு கிடைத்த வாக்குகளை விட 2018 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளில் 21.1 வீதம் குறைவாகப் பெறப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் இலஞ்சமாக அட்டாளைச்சேனைக்கு  பாராளுமன்ற பதவியினை வழங்கியது. இத்தேர்தலில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வழங்கிய தேர்தல் கால இலவச பொருட்கள் என்றும் இல்லாத வகையில் அதிகரிக்கப்பட்டது. ஜனநாயக முறையில் வாக்காளர் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்காமல் தேர்தல் தினத்தன்று கூட ஐயாயிரம் ரூபா தாள்கள் வழங்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலமை முஸ்லிம் காங்கிரஸிக்கு ஏற்பட்டுள்ளது.
குர்ஆனையும், ஹதீஸையும் யாப்பாக கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதான வீதியில் வாலுடன் வருகை தந்து எமது கட்சியினருக்கு தொல்லைகளை கொடுத்த நிலையிலும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேசிய காங்கிரஸிக்கு 7453 வாக்குகளை இப்பிரதேச மக்கள் தெளிவாக அளித்தனால் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியினை தீர்மானிக்கும் சக்தியாக தேசிய காங்கிரஸ் திகழ்கின்றது. குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிஸிக்கு 11361 வாக்குகள் கிடைத்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் 12616 வாக்குகளை அளித்து தங்களின் எதிர்பினை அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
பல சவால்கள், இலவச பொருட்கள், பணம் வழங்கி ஆதரவு தேடும் நிகழ்வுகளுக்கு தைரியமாக முகம் கொடுத்து நமது தேசிய காங்கிரஸின்  தெளிவான அரசியல் பயணத்திற்கு உரமாக திகழ்ந்து பெறும் பங்களிப்பு செய்த அம்பாறை மாவட்ட மக்களுக்கு தேசிய  காங்கிரஸ் சார்பில் விசேட நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
குறிப்பாக அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி, திராய்க்கேனி பிரதேசத்தில் நமது தேசிய காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த கட்சி பிரமுகர்களுக்கும், இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், வாக்களித்த மக்களுக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.