விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி அபார வெற்றி !!

பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான இன்றைய ஒருநாள் கிரிக்கட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 24 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிகுர் ரஹீம் 26 ஓட்டங்களை பெற்றுள்ளர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 3 விக்கட்டுக்களையும் துஷ்மந்த சமீர, திசர பெரேரா மற்றும் லக்சான் சந்தகன் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 11.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.

இன்றைய போட்டியில் இலங்கை சார்பாக தனுஷ்க குணதிலக மற்றும் உபுல் தரங்க ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.