பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ?

‘குளோபல் வார்மிங்’ என்றழைக்கப்படுகிற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இதற்கான அறிவிப்பை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார். அமெரிக்காவுக்கு சாதகமாக ஒப்பந்தத்தில் எந்த அம்சமும் இல்லை என்று விலகலுக்கு அவர் காரணம் சொன்னார்.
இந்நிலையில், நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் நேற்று டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப்டம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் பற்றி கேட்கப்பட்டபோது, “அந்த ஒப்பந்தத்தில் எனக்கு அந்த பிரச்சினையும் இல்லை. முன்னர் அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருந்த அம்சங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் அதில்  சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேர வாய்ப்புள்ளது” என்றார். 
டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.