ஜெயலலிதா ஆபத்தான நிலையிலேயே அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்: பிரதாப் ரெட்டி

 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்றும் சட்டஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கவே அவருக்கு காய்ச்சல் என்று அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் டெலிமெடிசின் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் மரணம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

”ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தாமல் இருக்கவே அவருக்கு காய்ச்சல் பாதிப்பு என்று தெரிவித்தோம். ஆபத்தான நிலையில்தான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்திவரும் வேளையில் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரதாப் ரெட்டி கூறிய கருத்துக்கள் குறித்து சுகாதார துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ஜெயலலிதாவின் உடல்நலன், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்கள் தினமும் பகிரப்பட்டன என்றும் பொது மக்களுக்கு தெரியும் வண்ணம் வெளியிடப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையான தகவல்கள் என்றும் கூறினர்.

மேலும் பிரதாப் ரெட்டி தெரிவித்த தகவல்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கை, அப்போலோ மருத்துவமனை தினமும் அளித்த மருத்துவ அறிக்கை ஆகியவை ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தெளிவாக கூறுகின்றன என்றும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

BBC