முடிவுக்கு வந்த பாசப் போராட்டம் , வனத்துறை மீட்ட குட்டி யானை தாயுடன் இணைந்தது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள, தேக்கம்பட்டி சாலையோரம், நேற்று முன்தினம் காலை ஒரு பெண் யானை சாலையில் செல்பவர்களை விரட்டியது. இதில், ஒரு ரோட்டாவேட்டர் மற்றும் ஒரு மொபட் மட்டும் லேசாக உடைபட்டது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மற்றும் அருகிலுள்ள கிராம விவசாயிகள் இணைந்து அந்த யானையை அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

யானை

 ஆனாலும்,  அந்த யானை மீண்டும் மீண்டும் சாலைப்பகுதிக்கே வந்தது. இதனால், அப்பகுதி முழுவதையும் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போதுதான் அந்தப் பெண் யானையின், ஒரு மாதம் மதிக்கத்தக்க குட்டி பழைய வாய்க்காலுக்குள் விழுந்திருப்பது தெரியவந்தது.

மேலும், அதனால்தான் பெண் யானை சாலையில் செல்பவர்களை துரத்துவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் குட்டி யானையை உடனடியாக மீட்டு, அதற்கு இளநீர் தண்ணீர், குளுக்கோஸ் கொடுத்தனர். குறிப்பாக, குட்டியானையை வனத்துறையினர் தோளில் தூக்கிச் சென்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

யானை

இதனிடையே, குட்டி யானையை, தாயுடன் சேர்த்து வைப்பதற்காக, அதை வனப்பகுதியில் விட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மாலை குட்டி யானை, தனது தாயுடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்றது. இது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி – விகடன்