சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி

சாய்ந்தமருதுது விவகாரம் தொடர்பில் நேற்றும் (30) இன்றும் (31) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், சந்திப்புகளில் எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளன.

குறித்த விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருது கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை மற்றும் மருதனை பிரதேசங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்களுடன் அமைச்சர் ஹக்கீம் நேற்றும் இன்றும் கலந்துரையாடல்களை கொழும்பில் மேற்கொண்டிருந்த நிலையிலேயே எவ்வித தீர்மானத்தையும் 
எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

                                                                        FILE IMAGE

இன்றிரவு 7.00 மணி வரை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான கட்சியின் உயர்பீட உறுப்பினர் யஹியாகான், ஜலால் (உயர்பீட உறுப்பினர்) பஷீர், ( மாநகர சபை முன்னாள் உறுப்பினர்) நிஸார்தீன் (மாநகர சபை முன்னாள்உறுப்பினர்) ஆகியோர் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்க வேண்டுமென்று மிக உறுதியுடன் அமைச்சரை கோரியுள்ளனர். ஆனால் கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிர்தவுஸ் மட்டும் எதிரான கருத்துகளை முன்வைத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கல்முனை மக்கள் சார்பில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பினை முன்வைத்துள்ளனர். முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட பலரும் இது தொடர்பில் கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டனர். இதன் போது பிரதியமைசச்ர் ஹரீஸும் அங்கிருந்தார்.

இது இவ்வாறிருக்க, கடந்த 29 ஆம் திகதி இரவு கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹாரீஸ் அவர்களைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று கட்சியின் தமையினால் ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் அதனை அவர் மீறிச் சென்று கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது அங்கு திரண்ட மக்களால் சாய்ந்தமருதுது விவகாரம் தொடர்பில் ஹாரீஸ் நிலையான முடிவை அறிவிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்ததனையடுத்து அங்கு அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பிலும் அதிருப்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபையின் முன்னளா் உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே பிரதியமைச்சர் ஹரீஸ் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரை மக்கள் சூழ்ந்ததால் அசாதாரண நிலைமை தோற்றுவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பின் போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, ஒரு மாநகர சபையிலிருந்து இன்னொரு பிரதேச சபையை உருவாக்குவதற்கு இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. ஆனால், ஒரு மாநகர சபையிலிருந்து ஒரு நகர சபையை மட்டும் உருவாக்க முடியும். அந்த அடிப்படையில் சாய்ந்தமருதுவை தனியான நகர சபையாக பிரகடனப்படுத்தலாம். 

இந்த நிலையில் இன்று கோரப்படும் நான்காகப் பிரிப்பு என்ற விடயம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால். நாட்டின் பொதுச் சட்டத்திலேயே மாற்றங்களைச் செய்து நாடாளுமன்றத்தின் ஊடாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற வேண்டும் என அங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.