ஆட்சிக்கு வந்தால் பத்து கோடி ஏழை மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிப்போம் :இம்ரான் கான்

பாகிஸ்தானின் மியான்வாலி நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் பங்கேற்று பேசினார்.

பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை மூட்டைகட்டி அனுப்பியதுபோல், பஞ்சாப் மாகாண முதல் மந்திரி ஷாபாஸ் ஷரிப்பின் ஆட்சிக்கும் விடை அளிக்கும் காலம் வந்து விட்டதாக குறிப்பிட்ட இம்ரான் கான், வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் சுகாதாரம், கல்வி, சட்டம் ஆகிய துறைகளை மேம்படுத்தி, சாமான்ய மக்களுக்கு நன்மையை ஏற்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

நான் அரசியலுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. சில வேளையில் மக்களாலும், தேர்தல்களாலும், என்னுடைய கட்சியினராலும் நான் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், மியான்வாலி மக்கள் என்னை எப்போதும் ஏமாற்றியதில்லை. 

மத்திய அரசை எங்களிடம் ஒப்படைத்தால் நிதித்துறை மற்றும் தேசிய பொறுப்புடைமை வாரியத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி, நாட்டில் வாழும் பத்து கோடி ஏழை மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிப்போம் என்றும் அவர் உறுதி அளித்தார்.