தலைவனின் மரணத்திற்கான காரணத்தை மண் போட்டு மூடுவதற்கு நினைத்தால்….

பஷீர் சேகு தாவூத்

தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரிய எனது விண்ணப்பம் பற்றி வாய்மூல விளக்கம் அளிப்பதற்காக இன்று தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் முன்னிலையானேன்.


ஜனாதிபதி செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிச் செயலாளர் ஒருவர் வாக்குமூலம் அளிப்பதற்காக வந்திருந்தார். அவர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அந்தக் குறித்த “கோவை” தேசிய சுவடிக் கூடத்துக்கு 2007 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

சேகுதாவூதின் விண்ணப்பத்திற்கு பதிலனுப்புவதற்காகச் செயலகம் அந்தக் கோவையை மீண்டும் சுவடிக் கூடத்திடமிருந்து பெற்றது. ஆனால், அந்தக் கோவைக்குள் உண்மையைக் கண்டறிந்த ஆணைக்குழுவின் அறிக்கை இருக்கவில்லை என்று பிரதிச் செயலாளர் சட்ட நுணுக்கத்தோடு அங்கு பதிலிறுத்ததை அவதானித்தேன்.

ஜனாதிபதியின் செயலாளர் எனது விண்ணப்பத்தை நிராகரித்து அனுப்பிய கடிதத்தில், அவ்வறிக்கையைத் தங்களால் தேடி எடுக்க முடியவில்லை என்று கையை விரித்திருந்தார். பின்னர் தகவலறியும் ஆணைக்குழுவுக்கு நான் நேரடியாக மேன் முறையீடு செய்தேன்.

மேன் முறையீட்டையொட்டி ஆணைக்குழு, ஜனாதிபதி செயலகத்திடம் எழுத்து மூலம் விளக்கம் கேட்டது. செயலகம் ஆணைக்குழுவுக்கு விலாசமிட்டும் எனக்குப் பிரதியிட்டும் அனுப்பிய பதில் கடிதத்தில், தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் தங்களுக்கு அனுப்பிய “கோவையில்” அறிக்கை காணப்படவில்லை. ஆதலால் அறிக்கையை வழங்க முடியாதிருக்கிறது என்று வெற்றுக் கோவை விளையாட்டை ஆடியிருந்தது.

ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில், விசாரணையை நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் செய்வது என்றும் அன்றைய தினம் தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தையும் விசாரணைக்கு அழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகமும், தேசிய சுவடிக்கூடத் திணைக்களமும் இணைந்து அஷ்ரஃபின் மரணத்திற்கான காரணத்தை பகிரங்கப்படுத்துவதைத் தடுப்பதற்காக ஒழித்து விளையாடுவதை அனுமானிப்பது அவ்வளவு கடினமல்ல.

“தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் குறைந்தது 30 வருடங்களுக்குக் கட்டாயமாக ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.”

2007 இல் அறிக்கைக் கோவை சுவடிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் ஒத்துக்கொள்கிறது. ஆக, திணைக்களம் அறிக்கையைப் பெற்று பத்து வருடங்கள்தானே கடந்திருக்கிறது. சட்டப்படி இன்னும் 20 வருடங்களுக்காயினும் திணைக்களம் இவ்வறிக்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும்.

சட்ட நுணுக்கத்தைப் பாவித்து எங்கள் தலைவனின் மரணத்திற்கான காரணத்தை மண் போட்டு மூடுவதற்கு நினைத்தால் அதே சட்டத்தால் “கிண்டி” வெளியில் எடுத்து குற்றவாளிகளின் தோள்களில் போட்டு அவர்களை வெய்யிலில் நிற்க வைத்து உலர வைப்போம்.

சுவடிக்கூடத் திணைக்களத்தின் பிரதிநிதியே, ஜனாதிபதி செயலகப் பிரதிநிதியே அடுத்த மாதம் 20 அன்று களத்தில் சந்திப்போம்.