மா.சபைக்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்ககைக்கு ஆட்சேபனை தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யவுள்ள குரல்கள் அமைப்பு

மாகாண சபைகள் தேர்தலுக்கான எல்லை நிர்ணய சபை நிர்யணியிக்கப்பட்டு அதன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.  வர்த்தமானி அறிவித்தல் சென்ற 13ம் திகதி எல்லை வரைபுக் குழுவினால் பத்திரிகைகளில் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு மாவட்டமும் பிரிக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை என்பன விளக்கப்பட்டுள்ளன.

1988ம் ஆண்டைய மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தின் சரத்து 3, மாகாண சபைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் முறையைக் குறிப்பிடுகிறது.மக்கள் தொகையில் ஒவ்வொரு 40000 பேருக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதோடு, அந்த மக்கள் தொகையானது இறுதியாகக் கணக்கெடுக்கப்பட்ட சனத்தொகைக் கணிப்பீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஆனால் வர்த்தமானி அறிக்கையைப் பார்க்கும் பொழுது மாவட்டங்களுக்கான உறுப்பினர்கள் இறுதியாக எடுக்கப்பட்ட, அதாவது 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது. இறுதிச் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி எண்ணிக்கைகள் தீர்மானிக்கப்பட்டிருந்தால் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட மாகாண சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையே வரும்.இது மாகாணசபைகள் தேர்தல் சட்டம் சரத்து மூன்றோடு தெளிவாக முரண்படுகிறது.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்து குரல்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்களின் ஆட்சேபனைக்கான காரணங்களைக் குறிப்பிட்டு எல்லை நிர்ணய சபைக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.அக்கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிகைகளையும் குரல்கள் இயக்கம் பிரேரித்துள்ளது.எல்லை நிர்ணய சபை விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்வதோடு இடஒதுக்கீட்டினை மீளப்பரிசீலிக்குமாறும் மாகாணசபைகளுக்கான தனது கடிதத்தில் வேண்டியுள்ளது.

எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதவிடத்து குரல்கள் இயக்கம் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட  உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யவிருக்கிறது.