இலங்கையில் ரோஹிங்கிய அகதிகள்: சோதனைகளும் வேதனைகளும்

 

இலங்கையில் இடைத் தங்கியிருக்கும் றோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் அனுபவிக்கும் வேதனைகள் அவர்கள் தாய் நாட்டில் எதிர்கொண்டவற்றை ஒத்திருக்கின்றன.

இலங்கையின் வடபுலத்தின் காங்கேசந்துறையில் இருந்து 13 கடல் கிலோ மீட்டர் தொலைவில் இலங்கைக் கடற்படையினரால் கைது, காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு, பின் வழக்கை எதிர்கொள்ளல், அடுத்து மிரிஹான முகாம் வாழ்க்கை, முகாமில் இருக்கும் போது சுகவீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு இளம் பெண் போலிசார் ஒருவரால் பாலியல் வன் கொடுமைக்குட்படுதல், தற்போது முஸ்லிம் எய்ட்ஸ் என்கிற அரச சார்பற்ற நிறுவனத்தினால் கல்கிஸ்ஸ தனியார் வீடொன்றில் வைத்துப் பராமரிக்கப்படுகையில் பௌத்த கொடுங்கோலர்களைக் கொண்ட குழுவொன்றால் விரட்டப்பட்டு பூஸா இராணுவ முகாமில் தங்கியிருத்தல்- இவ்வனுபவங்கள் அவர்கள் மறக்க விரும்பும் மியன்மார் நினைவுகளைத் தவிர அவர்களுக்கு வேறெந்த சந்தோசங்களைக் கிளறிவிடும்?

ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 30 அகதிகளில் 15 பேர் சிறுவர் சிறுமிகளாவர். மிரட்டியும், விரட்டியும் திரியும் காடையர் கும்பல் இவர்களைப் பயங்கரவாதிகள் என்கிறது.

இந்த ஆறு குடும்பங்களும் 2012 ஆம் ஆண்டு மியன்மாரில் பெரியதொரு இன, மத வன்கொடுமை கட்டவிழ்த்துவிடப்பட்ட காலத்தில் அங்கிருந்து பங்காளதேசத்துக்கு குடி பெயர்ந்தனர்.பின்னர் அங்கிருந்து இவர்கள் 2012 இலேயே சிலரும் 2013 இல் சிலரும் 2016 இல் சிலருமாக 
இந்தியாவுக்குள் வந்தனர்.

இவர்கள் முறையே 5, 4, 1 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்தவர்கள். அதுவும் ஜம்மு- காஷ்மீரில் பெயின்டர், எலக்ட்ரீசியன், ஆங்கில ஆசிரியர் போன்ற தொழில்களைச் செய்து வாழ்ந்து வந்தவர்கள் என்பது தற்போது பூசா முகாமில் இருக்கும் றோஹிங்கியர் அப்துழ்ழாஹ்வுடன் பேசிய வேளை அறிந்து கொள்ள முடிந்தது.2014 இல் டில்லி UN காரியாலயத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.இடையிடையே டில்லிக்குச் சென்று UNHRC அலுவலக உத்தியோகத்தர்களோடு கலந்துரையாடியுமுள்ளனர்.

மியன்மார் அகதிகள் அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்படுவர் என இந்தியாவில் செய்திகள் வெளிவந்த போது இவர்கள் அச்சத்தின் காரணமாக வேறொரு நாட்டுக்குச் செல்வதற்காகவே கடல் மார்க்கமாக வெளியேறியுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. நிச்சயமாக அவர்கள் செல்ல நாடிய நாடு இலங்கையல்ல அது அவுஸ்திரேலியாவாகும். இப்போது எங்கோ தப்பிச் செல்வதற்காகப் பயணித்த மக்களைக் கைது செய்து வைத்துக்கொண்டு அடாவடித்தனம் செய்கிறார்கள். இவர்கள் கைது செய்யப்பட்ட கடல் பரப்பில் எவ்வளவோ கடத்தல்கள் நடக்கின்றன, முன்னர் எத்தனையோ கப்பல்கள் வட கடலில் வந்து ஆயுதங்களை இறக்கிச் சென்றன. ஆயுதம் தரித்தோர் ஆயிரக் கணக்கில் நடமாடினர். இன்றும் கடல் மார்க்கமாக ஆட்கடத்தலும், பொருட்கடத்தலும் அமோகமாக தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.இவற்றையெல்லாம் தடுக்க வக்கற்றவர்கள் உயிரைத் தப்பி ஓடிக் கொண்டிருந்த அப்பாவிகளைப் பிடித்து வைத்து மனச் சித்திரவதை செய்கிறார்கள்.

ஒரு திட்டமிட்ட உள் தோக்கத்தோடு இந்த அப்பாவிகளை யாரோ எப்போதோ மூளைச் சலவை செய்து, அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஆசைகாட்டி அழைத்து வந்து இடையில் இலங்கைக் கடற்படைக்குத் தகவல் கொடுத்து மாட்டி விட்டுள்ளனர் என்று சந்தேகம் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.இதில் இலங்கை முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்வது நமது பாதுகாப்புக்கு அவசியமானதாகும்.

இவ்வகதிகள் சுமார் ஐந்து வருடங்கள் காஷ்மீரில் ஓரளவு சொந்தக்க காலில் நின்றிருக்கிறார்கள். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ஆந்திர மாநிலத்துக்கு வந்து தலைநகர் ஹைரதராபாத்தில் 3 மாதங்கள் இருந்துள்ளனர். 30 ஏப்பிரல் 2017 இல் இலங்கைக் கடல் எல்லைக்குள் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ் நாடு, தஞ்சாவூரில் 3 மாதங்கள் 
தங்கியிருந்து, நாகபட்டினத்தில் இருந்து கடல் மார்க்கமாகப் புறப்பட்டு அவுஸ்திரேலியா செல்வதாக எண்ணிக் கொண்டு வருகையிலேதான் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள வள்ளம் ஓட்டிகளான தஞ்சாவூரைச் சேர்ந்த கோபால் வேலுசாமி,அலி அக்பர் இப்றாஹீம்ஷா ஆகியோர் இன்னும் விளக்க மறியலில் இருக்கிறார்கள்.

பங்காளதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டுமானால் இருநாடுகளின் எல்லையில் அமைந்திருக்கும் கொல்கத்தா அல்லது பட்னாவுக்கு ஊடாகத்தான் களவாக வர வேண்டும். 

கலவர பூமியிலிருந்து தற்பாதுகாப்புக்காக தப்பி ஓடிவந்த ரோஹிங்கிய அகதிகள் அண்மையில் உள்ள பாதுகாப்பான பிரதேசங்களான கொல்கத்தாவிலோ, பட்னாவிலோ தங்காமல் ஏன் உள்நாட்டு யுத்தம் நடைபெறும் ஆபத்தான காஷ்மீருக்குச் செல்ல வேண்டும்? கொல்கத்தாவிற்கும் ஜம்முகாஷ்மீருக்கும் இடையில் 1696 கி.மீட்டர்கள் தூரமும், பட்னாவிற்கும் ஜம்முகாஷ்மீருக்கும் இடையில் 1228 கி.மீட்டர்கள் தூரமும் இருக்கையில் இவர்களை அங்கு அனுப்பியவர்கள் யார்?

இந்தப் பாவப்பட்ட, ஏமாற்றப்பட்ட அகதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்குமாறு பௌத்த தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்ட அவர்களின் எஜமானர்கள் யார்? ஹைதராபாத்தில் எவரது உதவியில் இவர்கள் தங்கியிருந்தனர்? தஞ்சாவூரில் எங்கு தங்கியிருந்தனர்? இவர்களது நடமாட்டத்தை இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் கவனிக்கவில்லையா?

இவை போன்ற இன்னோரன்ன கேள்விகளை எழுப்பி விடை தேடுவதே இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அவசியமானது. அல்லாது எதிரிகள் நாம் எவ்வாறு எதிர் வினையாற்ற வேண்டும் என்று நினைத்து வினையாற்றுகிறார்களோ அப்படியே செயல்பட்டு நாம் பலியாகி விடக் கூடாது. காலில் மிதிபட்டால் துள்ளுவது போல இவ்வாறான விடயங்களில் குதிக்க முடியாது. இலங்கை முஸ்லிம்களைத் தாக்குவதற்கான சூழலைக் கனிய வைக்கப் பார்க்கிறார்கள்.முன்பெல்லாம் இலங்கை முஸ்லிம்கள் வியாபாரக் குழப்பவாதிகள் என்று நிரூபிக்க முற்பட்டவர்களின் பிந்திய பரம்பரையினர் இப்போது முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று நிரூபித்து சிதற வைக்க முற்படுகிறார்கள்.

இவ்வாறான செயல்களின் முதல் இலக்கு முஸ்லிம்களாக இருந்தபோதும் இறுதி இலக்கு அமைதி கலங்கிய இஸ்திரமற்ற இலங்கைதான் என்பதை பௌத்தச் செயற்கைத் தீவிரவாதம் உணராவிட்டால் அந்தத் தீவிரவாதிகள் தாமும் இடை நடு இலக்குதான் என்பதை உணர்வதற்கு நகரும் காலம் அவர்களை விட்டு வைக்கப் போவதில்லை.

 

Basheer Segu Dawood