பெண்களும் தைராய்டு பிரச்சினையும்..!

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அதை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். 

 

உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. 

உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேருகிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது. தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். 

எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் பெண்களின் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும். 

அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அதை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். 

தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்தப் பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு வேறு சில குறைபாடுகளால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலன் தராது என்கிறார்கள், மருத்துவர்கள்.