நாம் தூங்கினால் ஹக்கீம் நம் தொடைகளில் கயிறு திரிப்பார் – பஷீர்

தீய மு.கா. அணித் தலைவர் ஹக்கீம் அட்டாளைச்சேனை உரையில் என்னைப்பற்றிக் கூறிய பொய்மைகளுக்கான பதில்கள்
******************************

BASHEER CEGU DAWOOD (former Minister)

1) நான் கரையோர மாவட்டமும் மண்ணாங்கட்டியும் என்று பேசியதாக உரைத்தமைக்கு..

இந்த மண்ணாங்கட்டியைத் தவத்தின் மூக்குச் சழி துடைத்த கைக்குட்டையிடம் இருந்தே கடன் வாங்கிப் பேசியுள்ளார். இதே கருத்தை முன்பொருமுறை தவமானவர் வெளியிட்டிருந்தார் என்பதை நினைவூட்டிப் பாருங்கள்.

நான் எவ்விடத்திலும் அவ்வாறு கூறவில்லை.முடியுமானால் ஆதாரத்தை வெளியிட்டுக் காட்டட்டும்.”முஸ்லிம் கரையோர மாவட்டம் என்பது வடகிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைக்குரிய தீர்வாகாது” என்றே குறிப்பிட்டேன். இது தொடர்பாக வீரகேசரி வார வெளியீட்டில் ஊடகவியலாளர் சஹாப்தீன் ஒரு தெளிவான கட்டுரையை அக்காலப் பகுதியில் தீட்டியிருந்தார். இதனை இன்றும் வாசித்துத் தெளிவு பெறலாம். நான் பல தடவை முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்திற்காகக் குரல் கொடுத்துள்ளேன், இதற்கான ஆதாரம் ஒரு ஊடகச் செய்தியாகக் கீழே தரப்படுகிறது.

2) முன்னர் மஹிந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் கிடைக்காமல் செய்வதற்கு நான் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று உளறியுள்ளார்.

மஹிந்த நமது கட்சியைச் சுற்றி வளைத்து இறுக்கி வைத்திருந்தமைக்கு அவரது தனிப்பட்ட அழுக்குப் பழக்கள்தான் காரணம் என்பதை முன்னரே நிரூபித்துள்ளேன்.

கட்சிக்கு முதலமைச்சரைப் பெறுவதற்கு ஹக்கீமே விரும்பவில்லை, ஏனெனில் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அம்பறையில் இருந்து கிழக்கு முதலமைச்சரானால் மக்கள் இவர் பின்னால் அணி திரள்வர், இப்படி நிகழ்ந்தால் தனது தலைமைப் பதவியும் அரசியல் அனுகூலங்களும் பறி போய்விடும் எனப் பயந்தார். இனியும், எக்காலத்திலும் அம்பாறையில் இருந்து ஒரு முஸ்லிம் காங்கிரஸ் போராளி முதலமைச்சராவதற்கு ஹக்கீம் தலைவராக இருக்கும் வரை விடவே மாட்டார்.மட்டக்களப்பில் இருந்து நஸீர் ஹாபிஸ் முதலைமைச்சராவதற்கு அனுமதியளித்ததற்கு பல காரணங்கள் இருக்கின்றன்றன.ஒன்று, நஸீர் கட்சியைக் காட்டிக் கொடுத்தவர் என்பதனால் கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளிடம் செல்வாக்குப் பெற முடியாது. ஆகையால் தன் தலைமைக்கு ஆபத்தில்லை. இரண்டாவது, பஷீரை எதிர்ப்பதற்கு ஒரு மாற்று அரசியல் அதிகார பலம் ஏறாவூரில் தேவைப்பட்டது.மூன்றாவது, பணத்தேவைகளுக்கு இவரைப் பயன்படுத்தலாம். அடுத்து, இவரை நினைத்த தேரத்தில் அதிக கஷ்டமின்றி இலகுவாகத் தூக்கி எறியலாம். மேலும்,தனக்கு மிகச் சிறந்த தனிப்பட்ட ஏஜன்டாக இவரை உபயோகிக்கலாம். இவ்வாறு இன்னும் பல..

3) என்னை ஹஸனலி கரையோர மாவட்ட விடயத்தில் எதிர்த்து கருத்துரைத்ததாகக் கூறினார்.

ஹஸனலி என்னை கடந்த 23 வருட காலத்தில் எதிர்த்ததற்கான ஆதாரத்தை ஏதாவதொரு பத்திரிகை அறிக்கையையோ, அதியுச்ச பீடக் கூட்டக்குறிப்பையோ அல்லது பொதுக்கூட்டப் பேச்சையோ ஆதாரமாகக் காண்பிக்குமாறு ஹக்கீமுக்கு சவாலிடுகிறேன்.

கிழக்கின் புத்திரர்களே!
நாம் தொடர்ந்து நன்றாகத் தூங்கினால் நமது தொடைகளில் தும்புக் கயிற்றைத் திரிப்பதை அவர் தொடரத்தான் செய்வார்.

நான் முகநூலினை மூடுவதற்கு எண்ணியிருந்த எனது விருப்பத்தைத் தோற்கடித்து மீண்டும் ‘எக்டிவாக’ இயங்குவதற்கு வாய்ப்பளித்த அறிவிலித் தனமான அட்டாளைச்சேனை மேடைப் பேச்சுக்கு நன்றிகள்!