அமைச்சர் ரிஷாட்டின் கோரிக்கைக்கமைய உயர்தர பரீட்சை பொது அறிவு பாடம் 3ம் திகதியில் – கல்வி அமைச்சு முடிவு

 

ஊடகப்பிரிவு 

எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு,  கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

ஏதிர்வரும் 2ஆம் திகதி முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால்,  அன்று இடம்பெறவிருந்த குறிப்பிட்ட பாடத்திற்கான பரீட்சையை, பிற்போடுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக  அமைச்சர் அகிலவிராஜ்; அறிவித்துள்ளார்.  

பரீட்சையை திட்டமிட்டப்படி உரிய தினத்தில் நடாத்தாமல், அடுத்த நாள் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதன் மூலம், பரீட்சை திணைக்களத்திற்கு மேலதிக செலவும், சில கஷ்டங்களும் இருக்கின்றபோதும், முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஹஜ் பெருநாள் தினத்தில் அந்தப் பரீட்சையை நடாத்துவது  முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை  கவனத்திற்கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்தார். 

இந்தவிடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் புஷ்பகுமாரவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் தொடர்புகொண்டு, பரீட்சையை அடுத்தநாள் நடாத்தும்  இந்தத் தீர்மானத்தை உறுதிப்படுத்தினார்.