வித்தியா கொலை வழக்கு -சந்தேக நபர்கள் தப்பிக்க உதவிய உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம் : பூஜித்த

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகநபர்கள் தப்பிக்க உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். 

நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவரிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

வித்தியா படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. 

இதற்கமைய, முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் படி, தற்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஶ்ரீ கஜன் சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பிக்க உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.