வடமாகணம் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது : நீதி அமைச்சர்

நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துவரும் நிலையில் வடமாகணம் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாங்குளத்தில் இன்று இடம்பெற்ற புதிய நீதிமன்றம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடந்தும் தெரிவிக்கையில்,

 

இன்று சிறைச்சாலைகளில் காணப்படும் 50 வீதத்திற்கு அதிகமான குற்றவாளிகள் மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாகவே விளக்கமறியளில் இருக்கின்றனர்.

 

இதன் அடிப்படையில் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்றது. மேலும், வடமாகாணம் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. இந்த போதைபொருள் பாவனையில் இருந்து எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கு பொலிஸாரினாலோ நீதிமன்றத்தினாலோ மட்டும் முடியாது. நான் உங்கள் அனைவரிடமும் இவ்வேளையிலே வேண்டிக்கொள்வது என்னவென்றால், இச்செயலை சிறுவிடயமாக நீங்கள் கருதக்கூடாது. இந்த போதைப் பொருள் பாவனையை தவிர்த்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கான நீங்கள் அனைவரும் உதவிகளை நல்க வேண்டும். இது தொடர்பிலான சகல உதவிகளையும் ஒரு அரசு என்ற வகையில் நாம் செய்வதற்கு தயாராகவுள்ளோம்.

மேலும், தர்மத்தை பின்பற்றாதுள்ள 5 வீதத்திற்கும் குறைவாக மக்கள் காரணமாகவே எமது இந்த நீதித்துறையானது தேவைப்படுகிறது. இந்த அதர்மத்தில் ஈடுபடும் 5 வீதமான மக்களிடம் இருந்து 95 வீதமான பொது மக்களை காப்பாற்றுவதற்கே இந்த நீதித்துறை தேவைப்படுகின்றது என்று அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.