லண்டன் நகரில் மர்ம நபர்கள் தாக்குதல் – 12 பேர் கைது..

லண்டன் நகரில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 12 பேரை லண்டன் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.


லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நேற்று சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. 

இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல்தாரிகள் மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக 12 பேரை கைது செய்துள்ளதாக லண்டன் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.