ஆண்டவனிடம் துஆக் கேட்போம் அராஜகங்கள் அழிந்து போக.

ஆனக் கட்சியும் ‘ஞான’க் கூட்டமும்

Mohamed Nizous

ஆட்சியில் உள்ளவரே
ஆச்சரிய ஆட்சி என்று
மூச்சுக்கு மூணு தரம்
முனங்கியது என்ன ஆச்சு?
கூச்சலிடும் வெறியர்களை
கூண்டிலே அடைப்போமென
ஆச்சி உரைத்ததெல்லாம்
அம்போண்ணு ஆகிப் போச்சா?

கோத்தா தோத்துப் போனா
கூத்து முடியுமென்று
பாத்துப் பாத்து வாக்களித்தார்
பாத்தும்மா ராத்தாக்கள்.
பாத்திரம்தான் மாறியது
பழைய சரக்கு மாறல்லயே
நாத்தம் புடிச்சவனின
நாக்கு அடங்கல்லயே.

அழுத்கம சம்பவத்தால்
அழுக்காகிப் போன ஆட்சி
வழுக்கைத் தலையால்தான்
வழுக்கி விழுந்ததென்று
துலக்கமாய்த் தெரிந்திருந்தும்
தொடர்வதேன் அதே வழியை.

ஆனக் கட்சி ஆள்கிறதா
ஞானக் கூட்டம் ஆள்கிறதா
நானாமாரு பல பேர்கள்
வீணா இருக்கார் பார்லிமெண்டில்
போன ஆட்சி பூனை ரெண்டு
புலியாகி சீறுவது
மானா ரானா ஆட்சியினை
மறுபடியும் கொண்டு வரவே

போற போக்குச் சரியில்லை
சாரப் பாம்பு படம் எடுத்து
ஊரப் போட்டு குழப்புவது
யாரு கொடுத்த காசுக்கோ?
வேற வழி இப்ப இல்ல
விரக்தியாகிப் போவதிலும்
ஆண்டவனிடம் துஆக் கேட்போம்
அராஜகங்கள் அழிந்து போக.