அமைச்சர் ஹக்கீமின் சிலாவத்துறை சாதனையின் சீத்துவம்

                       

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றுதான் சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றிய விடயமாகும்.இது வரை இதனை அகற்றியமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்போ அமைச்சர் றிஷாதோ உரிமை கோராமை குறிப்பிடத்தக்கது.இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிதும் உரிமை கோராத போதும் அவர்களையும் இப் புகழினுள் சேர்ந்து நன்றி கூறிய அமைச்சர் ஹக்கீமின் பெரு மனதை இவ்விடத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது.

இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முசலி பள்ளிவாயலில் வைத்து 27-04-2017ம் திகதி சனிக்கிழமை  அமைச்சர் ஹக்கீமிடம் முசலி கடற்படை தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்பட்டு அதன் பின்னர் அமைச்சர் ஹக்கீம் அதனை ஜனாதியிடம் ஒப்படைத்து ஜனாதிபதி கடற்படை முகாமை அகற்ற உத்தரவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

இப் பிரச்சினை எழுந்து ஒரு தசாப்தம் நிறைவு பெறவுள்ள நிலையில் கடந்த மாதம் தான் அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பான  முழுமையான அறிக்கையை பெற்றுள்ளார் என்றால் அவரின் இது தொடர்பான அக்கறையை நான் சொல்லத் தேவையில்லை.குறித்த கடற்படை முகாம் அகற்றப்படும் செய்தி இம் மாதம் நான்காம் திகதி அறியக்கிடைத்தது.அதாவது ஆறு நாட்களுக்குள் இப் பிரச்சினையை அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியுடன் பேசி தீர்த்துள்ளார்.அமைச்சர் ஹக்கீம் இத்தனை பலமிக்கவரா என சிந்தித்தாலும் இதிலுள்ள உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

தற்போது கடற்படை முகாமின் ஆறு ஏக்கர் காணி மட்டுமே கடற்படை இடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.கடற்படை விடுவித்த காணியை தற்போது கைப்பற்றியுள்ளதாகவும் அறிய முடிகிறது.அப்படியானால் அமைச்சர் ஹக்கீம் இராணுவத்துக்கு காணி எடுத்து கொடுக்கவா குழு நியமித்து அறிக்கை பெற்று ஜனாதிபதியை சந்தித்து தீர்வை பெற்றுக்கொடுத்தார்.தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது போன்று பல மடங்கு காணிகள் (34 ஏக்கர் அளவிலான) இன்னும் விடுவிக்கப்படாமல் கடற்படையினரின் கட்டுப்பாட்டினுள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று குறித்த கடற்படை முகாமுக்கு நில அளவீடு செய்யும் நோக்கோடு வந்த அதிகாரிகளை மக்கள் முன்னின்று தடுத்து தங்கள் காணிகளை பாதுகாத்துள்ளனர்.இதுவும் தானே செய்தேனென அமைச்சர் ஹக்கீம் உரிமை கோரினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இதில் கைக்குழந்தையுடன் பெண்கள் வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இப்படியான ஒன்றை தான் அமைச்சர் ஹக்கீம் தான் சாதித்துவிட்டதாக உரிமை கோரி இருந்தார்.ஊரா கோழியை அறுத்து உம்மாவின் பெயரில் கத்தம் ஓதுவது என்பது இதனை தானோ? அமைச்சர் ஹக்கீம் அவர்கள் வேறு ஒரு நோக்கத்துக்காக செய்த ஒன்றை தான் கூறியதால் செய்துவிட்டதாக நம்பிவிட்டார்.இப்படியாவது அவரும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்வுறட்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.