யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஜோய் மகிழ்மகாதேவா குறித்த சந்தேகநபர்களை இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10ஆவது மற்றும் 12ஆவது சந்தேகநபர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி இரு சந்தேகநபர்களும் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் ஜோய் மகிழ்மகாதேவா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்கள் இருவரையும் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலையில் சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும் குறித்த வழக்கு விசாரணைகள் 98 வீதம் முடிவடைந்துள்ளதாக அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கைது செய்யப்பட்ட 12 பேரில் 10ஆவது மற்றம் 12ஆவது சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வித்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.