ஏதிர்க்கட்சியினர்களைப்போன்று தாங்கள் வழக்கமாக கையாளுகின்ற பம்மாத்து அரசியற் செயற்பாடுகளை இனியும் நிறுத்த வேண்டும்

முஸ்லிம் சமூகம், கற்றுக் கொண்ட பாடங்களை வைத்தே முடிவுகளை எடுக்க வேண்டும். 

இன்று, நம் நாட்டின் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏரளமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, வில்பத்துவிலும், அம்பாரை மாணிக்கமடுவிலும் முஸ்லிம்களை முடக்குவதற்கான பாதைக்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் நடக்கும் அட்டகாசங்களின் அகோரங்கள் நீங்கள் அறிந்ததே. தானாடாவிட்டாலும் நம்மவரின் தசை ஆடுவதை நாடு பூராகவும் காணக்கிடைக்கிறது. நம் இளைஞர்களின் உணர்வுகள் உச்சமடைந்து அடக்கிக் கொண்டிருப்பதனால் வெப்புசாரமாகி அவர்களின் கண்கள் நீரை வடித்துக் கொண்டிருக்கின்றன. 

 

இவ்வாறான சூழ்நிலையில், நம் சமூகம் சுயதேவைக்காக ஆளுக்கொரு தீர்மானம் எடுப்பதனை நிறுத்த வேண்டும். மற்றவரின் தூண்டுதலுக்குள்ளாகி உணர்ச்சி உச்சமானதன் விளைவாக எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். வரலாற்றில் நாம் நிறைய பாடங்களைப் படித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் எல்லாத் தரப்பினருடைய பங்குபற்றுதலோடும் சமூகத்தால் திட்டமிட்டு நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்ட முறைகளே இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமான முகக்கொடுப்பாக அமையும். பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களும் இதனைக் கற்றுத்தந்திருக்கிறார்கள். 

மாறாக, வழக்கம் போல் மக்களை உணர்ச்சியின் உச்சத்தைக் காணவைத்து அந்த சூடான நிலையில் தங்களுக்குரிய அரசியல் ஆதரவினை தக்கவைக்க நினைக்கும் ஆண்டவனுக்கு மாறான இவ் அரசியல் கோட்பாடுகள் நம் மக்களை வாழவைக்காது. 

குறிப்பாக இன்றைய சூழ்நிலையில், அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இன்று நடைபெறுகின்ற சூழ்ச்சிகரமான செயற்பாடுகளின் பின்னணியைப் புரிந்து கொள்ளவேண்டும். வாக்களித்த மக்களுக்கு அவர்களுடைய அரசாங்கத்திலேயே தீர்வு இருக்கிறது என்ற யதார்த்தத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் ஜனாதிபதி பிரதமர் போன்றோருடன் பேசி தீர்வுகாண்பதற்காக இதய சுத்தியோடு உழைக்க வேண்டும். அது அவர்களுடைய தார்மீகக் கடமையுமாகும். மாறாக ஏதிர்க்கட்சியினர்களைப்போன்று தாங்கள் வழக்கமாக கையாளுகின்ற பம்மாத்து அரசியற் செயற்பாடுகளை இனியும் நிறுத்த வேண்டும். பாவம் முஸ்லிம் மக்கள். 

நமது முஸ்லிம் உடன் பிறப்புகள் இதனை கவனமாக உணர்ந்து கொண்டு, கடந்த கால அனுபவங்களையும் அவர்கள் கருத்திற்கொண்டும் கண்டநிண்டவாறு யாருடைய தேவைகளுக்காகவோ ஏற்பாடு செய்யப்படும் போராட்டங்கள், ஹர்த்தால், கடையடைப்பு போன்றவைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு செயற்பாடுகளிலும் யார் அல்லது எந்த சக்தி இதன் பின்னணியில் இருக்கிறது என்பதனையும் அறிந்து அவர்களின் உள்நோக்கங்களைப் புரிந்தும் முடிவுகளை எடுக்க வேண்டும். இவை தொடர்பான கண்டநிண்டவர்களினாலும் ஊர்பேர் இல்லாமலும் வெளிவரும் துண்டுப்பிரசுரங்களை கருத்தில் எடுக்கத் தேவையில்லை. ஆண்டவன் உங்களுக்கு அருள் புரியட்டும். 

தேசிய காங்கிரஸின் தலைவர் 
ஏஎல்எம். அதாஉல்லா அவர்களின் ஊடகப்பிரிவு