இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று (26) காலை சின்னமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

உலகளாவிய வர்த்தகத்தில் இன்று நாம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி உலக வர்த்தக மையத்தின் அழுத்தங்களின் காரணமாக வராலாற்று முக்கியத்துவமிக்க வர்த்தக வசதிகள் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

21 வருடகால வரலாற்றைக் கொண்ட உலக வர்த்தக மையத்தின் முயற்சியினால் இந்த வர்த்தக வசதிகள் உடன்படிக்கைக்கு 164 நாடுகள் இணக்கம் தெரிவித்தன. அமெரிக்க அரசியல் மாற்றத்தினால் பல்பக்க வர்த்தகம் பிரெக்சிட் எதிர்மறை விளைவுகள் ட்ரான்ஸ் பசுபிக் வீழ்ச்சி, வர்த்தகப் பரிமாற்றல் ஆகியவற்றை ஈடுகொடுக்கும் வகையில் இந்த வரலாற்று வெற்றி அமைந்தது.

வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் கீழ் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் அமைக்கப்பட்ட தேசிய வர்த்தக வசதிகள் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் எனது அமைச்சின் கீழான வணிக சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் நான் மனநிறைவடைகின்றேன்.

வர்த்தக  வசதிகள் உடன்பாடு தொடர்பிலும் இலங்கையில் அதனை அமுல்படுத்துவது தொடர்பிலும் நான் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கையின் வர்த்தக வசதிகள் செயலகம் வசதியான கட்டமைப்புக்கள் கட்டுப்பாடில்லாத வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் வர்த்தகத்துறையில் பலமான இலகுவான வர்த்தகப்பறிமாற்றங்களை ஏற்படுத்த இது உதவியுள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் பிரதான இலக்கை அடைவதற்கும் இது வழிவகுத்துள்ளது. உலக வங்கியின் உதவிகளைப் பெறுவதற்கு வசதியை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் கீழ், வர்த்தக வசதிகள் மறுசீரமைப்பு பலப்படுவதற்கும் புதிய சுங்க விதிகளை உருவாக்குவதற்கும் இது வழிவகுத்துள்ளது. வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதற்கான பிரதானப் பங்கு இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. 

இந்த உடன்பாட்டின் மூலம் உலக வங்கி கூட்டு நிறுவனங்கள் பிரதான இணைப்பாளராக இலங்கையில் செயற்படுவதற்கு நன்றி தெரிவிக்கின்றோம்.ஐரோப்பிய யூனியன் – இலங்கை வர்த்தக அபிவிருத்தி செயற்திட்டத்திற்கும் உலக வங்கி தனது உதவிகளை வழங்கி வருகின்றது. 

சர்வதேச வணிக சங்கம், தேசிய வர்த்தக வசதிகள் குழு குழுவையும் அதனது செயலகத்தையும் பலப்படுத்துவதற்கு வழிகளைத் திறந்துள்ளது. பல்வேறு வர்த்தக முகவர் நிறுவனங்களின் நகலான முயற்சிகளைத் தவிர்ப்பதற்கு இது பிரதான பங்கினை வகிக்கின்றது. 

இலங்கையைப் போன்ற நுண்பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தேவையான நாடுகளின் வர்த்தக செயற்தினை அதிகரிக்க வர்த்தக வசதிகள் உடன்பாடு ஒப்பந்தம் பெரிதும் துணை செய்துள்ளது.

கொழும்பில் இயங்கும் சர்வதேச வணிகச்சங்கம், வர்த்தகத்திற்கான உலகளாவிய கூட்டு ஆகியவை புரிந்துணர்வையும் பலமான உறவையும் வளர்ப்பதற்கு உலக வர்த்தக மைய வர்த்தக வசதிகள் உடன்பாடு வழிவகுப்பதற்கு இந்த செயலமர்வு உதவுமென நான் நம்புகின்றேன்.

வர்த்தக வசதிகள் உலகளாவியக் கூட்டு மையத்தின் உதவிகளையும் வளங்களையும் அனுபவிப்பதில் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்றென்பதைத் தெரிவிப்பதில் நான் சந்தோஷமடைகின்றேன் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வர்த்தகத்திற்கான உலகளாவியக் கூட்டின் உப தலைவர் டோனியா ஹம்மாமி, சர்வதேச வர்த்தகத்தின் இலங்கைக்கான தலைவர் கீர்த்தி குணவர்தன, வர்த்தக வசதிகளுக்கான உலகளாவியக் கூட்டின் சிரேஷ்ட அலோசகர் எரிக் மில்லர் ஆகியோர் உட்பட வெளிநாட்டு வளவாளர்களும் பங்கேற்றனர்.