கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அவலநிலை

(நௌபர் ஜமால் – நலன்விரும்பி)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைகளுள் ஒரு மருத்துவமனையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக காணப்படுவதை அங்கு சென்றுவரும் நோயாளிகள் அவதானிக்கின்றனர். இங்குள்ள பௌதீக வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக நோயாளர்கள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.

இம் மருத்துவமனைக்கு பல பிரபல வைத்தியர்கள் கிளினிக் மற்றும் ஆலோசனை வழங்கல் சேவைகளுக்காக வருகின்றனர். அவர்களது சிபாரிசின் பேரில் நோயாளர்களும் செல்கின்றனர். இருப்பினும், அங்குள்ள கட்டிடங்கள் முறையாக மறுசீரமைப்பு செய்யப்படாமல் இருப்பதுடன், சில உபகரணங்களும் பராமரிப்பற்றதாக காணப்படுகின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. மருத்துவமனை அறைகளையும், அதன் வெளிச்சூழலையும் பார்க்கின்ற நோயாளிகள், உள்ளும் புறமும் முறையாக துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நினைத்து முகம் சுழிக்கின்றனர்.

மருத்துவமனை என்பது நோயாளிகளை குணப்படுத்தும் இடமாகும். அங்கு சுத்தமும் நல்ல சுற்றுப் புறச் சூழலும் இருப்பது மட்டுமன்றி, கட்டிடமும் உபகரணமும் சிறந்த முறையில் பராமரிக்கப்படவும் வேண்டும். இதனை சீர் செய்வதற்கு குறிப்பிட்ட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவமனைகளை மேற்பார்வை செய்யும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென நலன்விரும்பிகள் கேட்டுக் கொள்கின்றனர்.