சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, சிறிய ரக காராக ‘பொப் அப் சிஸ்டம்’

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ‘பொப் அப் சிஸ்டம்’ (Pop. Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பொப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத முறையில் பேட்டரியால் இயங்கக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கிச் செல்கிறது.

சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாகக் கடந்து செல்ல வேண்டும் என்று கருதும் நேரத்திலும், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

வானத்தின் வழியாக பறந்து செல்ல சுலபமான பாதை எது என்பதை இந்த காரில் உள்ள கம்ப்யூட்டரே தீர்மானித்துக்கொள்ளும்.

இதற்காக, வானத்தில் வட்டமடித்தபடி வரும் ஆளில்லா விமானம் சாலையில் நிற்கும் ‘பொப் அப் சிஸ்டம்’ காரின் மேல் அமர்ந்துகொள்ளும்.

இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் சாலையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ந்து செல்ல முடியும் என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

காரின் உடல் பகுதியை சக்கரங்களில் இருந்து தனியாக பிரித்தெடுத்து பறந்து செல்ல முடியும் என இந்த பறக்கும் கார்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் கூட்டாக ஈடுபட்டுவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எயார்பஸ் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இட்டால்டிசைன் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் கருதுகின்றனர்.

2030 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் ஏற்படவுள்ள வாகனப்பெருக்கம் காற்று மாசுபாடு ஆகியவற்றை கருத்திற்கொண்டு இத்தகையை கார்களை விரைவில் உருவாக்கும் முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் படுவேகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.