மனித உரிமைகள் ஆணைக்குழு தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்குமா ?

றிசாத் ஏ காதர் 

 கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையினால், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி,  தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று செவ்வாய்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயத்தில் முறைப்பாடொன்றினை கையளித்தனர்.

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ் வண்டிககளின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நடந்து கொள்கின்றமை பற்றியும், இதனால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஐ. மௌலான தெரிவித்தார்.

“ஏற்கனவே, மேற்படி பயணப் பாதையில் போதியளவான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட பயண வழி ஊடாக சேவையில் ஈடுபடும் பொருட்டு, மேலதிகமாக பல பஸ் வண்டிகளுக்கு கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார். இதனால், ஏற்கனவே தொழிலில் ஈபடுபட்டுக் கொண்டிருக்கும்  பஸ் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை எழுத்துமூலம் அறிவித்திருந்தோம், கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்திந்து பிரச்சினைகளை தெளிவுபடுத்தியிருந்தோம். ஆயினும், எமக்கு எவ்வித தீர்வுகளும் இதுவரை கிடைக்கவில்லை. இதனாலேயே, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாம் முறைப்பாடு செய்தோம்” என்றும் மௌலானா கூறினார்.

தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நிரந்தரமான தீர்வொன்றினை நாடியே, தாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமது முறைப்பாட்டை கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக,  இ.போ.சபையின் 14 பஸ்களும் தனியாருக்கு சொந்தமான 21 பஸ்களுமாக மொத்தம்  35 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பஸ் வண்டிகள் ஒன்றிணைந்த சேவை ஊடாக, போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து ஆதிகார சபையின் தவைரும், வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளரும் இணைந்து மேலதிகமாக பஸ்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனால் ஏற்கனவே இப்பயண வழியில் சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகளின் நேர இடைவெளி களவாடப்படுவதாகவும், மேலும் பலவிதமான அசௌகரியங்களை தாம் எதிர்கொள்வதாகவும் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேற்படி முறைப்பாட்டினை கையளிக்கும் போது, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையார் சங்கத்தின் செயற்பாட்டாளர் எம்.எஸ்.பைறூஸ் மற்றும் நிருவாக உறுப்பினர்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.