புறக்கோட்டை சந்தையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திடீர் சுற்றிவளைப்பு !

 

 

அமைச்சின் ஊடகப் பிரிவு

கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போது  17150 கிலோ கிராம் (25*686 பைகள்) அரிசியை மொத்த வியாபார நிலையமொன்றிலும்,  23,050 கிலோ கிராம் அரிசியை (25*922 பைகள்) இன்னுமொரு வியாபார நிலையத்திலும் 1900 கிலோ கிராம் (25*76 பைகள்) அரிசியை இன்னுமொரு வியாபார நியைத்திலும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

17150 கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்ட வியாபார நிலையத்தில், அரிசியை கையிருப்பில் வைத்துக்கொண்டு வியாபாரிகளுக்கு அரிசி வழங்க மறுத்தமையினாலேயே விசாரணை அதிகாரிகள் அங்கு பரிசோதனை செய்து மேற்குறிப்பிட்ட தொகை அரிசியைக் கைப்பற்றினர்.

ஏனைய இரண்டு வியாபார நிலையங்களிலும் அரிசிக்கு பிரசித்தம் பெற்ற உறைகளில் வேறு அரிசிகளை மாற்றீடு செய்து விற்பனை செய்தமை  கண்டு பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இவர்களுக்கெதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழான சட்டத்தின் 14,17 பிரிவுகளுக்கிணங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதே வேளை பெப்ரவரி மாதம் 2064 திடீர்ச் சுற்றி வளைப்புக்கள் இடம்பெற்றதாகவும் இவற்றில் 1367 வர்த்தகர்களுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். 

அரிசியைப் பதுக்கி சந்தையில் விலையை வேண்டுமென்றே அதிகரிக்க மேற்கொண்ட முயற்சியையடுத்தே அரசாங்கத்தினால் இறக்குமதி அரிசிக்கும் உள்நாட்டு  அரிசிக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் பின்னரும்  மோசடி வியாபாரம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கைத்தொழில் வர்த்தகர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து நாடளாவிய ரீதியில் விசாரணை அதிகாரிகளைக் கொண்ட குழு தீவிர தேடுதலில் இறங்கியுள்ளது கொழும்பு மாவட்டத்தில் 2 பிரத்தியேகக்குழுக்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு சுற்றி வளைப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.