பொலிஸார் ஆதரவுடன் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வு..?

க.கிஷாந்தன்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாவெலி ஆற்றுக்கு நீர் வழங்கும் வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் வட்டவளை ஒயா ஆற்றுப் பகுதியில் பாரிய மாணிக்கல் அகழ்வு குழிகள் காணப்படுகின்றது. இங்கு சட்டவிரோதமான முறையில் பல நாட்களாக மாணிக்கல் அகழ்வு இடம்பெற்றுவருவதாக இப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆதரவுடன் சிலர் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும், இப்பிதேச மக்கள் தெரிவித்தனர்.

மேலும், இச்சம்பவத்தை விசாரிக்கும் பொழுது, சட்டவிரோதமான முறையில் இப்பிரதேச மக்கள் தான் இப்பகுதியில் மாணிக்கல் அகழ்வில் ஈடுப்படுவதாக புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அச்சுறுத்தியதாகவும் இப்பிதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.

புதிதாக நியமிக்கபட்ட வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் எமக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இதற்கு முன்னர் இவ்வாறு இடம்பெற்றதில்லை.

பாதையில் செல்ல முடியவில்லை. கடந்த 23ம் திகதி தங்களை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து தங்களின் பெயர் விபரங்களை எழுதிக்கொண்டு மிரட்டி அனுப்பியதாகவும், ஆனால் அன்று இரவும் அப்பகுதியில் மாணிக்கல் அகழ்வு இடம்பெற்றதாகவும், ஏற்கனவே இருந்த பொலிஸ் அதிகாரியினால் இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை, தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரினால் தான் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம்பெறுகின்றது என இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பதிகாரிதான் எங்களை மிரட்டி வைத்துக்கொண்டு அவர் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறான அகழ்வில் ஈடுப்படுகின்றார் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இது தொடர்பில் அட்டன் பிரதேச பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவியபோது, தமக்கு இது தொடர்பில் எந்தவிதமான முறைபாடுகளும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் புதிதாக நியமிக்கபட்ட பொலிஸ் அதிகாரி அவ்வாறான செயல்களில் ஈடுப்படுபவர் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எது எவ்வாறாகயிருந்தாலும் இந்த சட்டவிரோதமான மாணிக்ககல் அகழ்வினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், மகாவெலி ஆற்றுக்கு நீர்வழங்கும் இவ் குறித்த ஆறு மாசடைவதாகவும் இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.