DVD , FILE ஆதாரங்களுடன் பஷீர் , நான் மரணித்தாலும் ஆவணங்கள் மக்களுக்கு வழிகாட்டும்

உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன

அஸ்ஸலாமு அலைக்கும்!

கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட “அதிர்வு ” நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற்றைக் கூடத் தெரியாதவர்களும், வேண்டுமென்றே என்னை ஏச ஆசைப்படுபவர்களும், எலி வால் பிடிக்கும் கோமாளிகளும், பழைய- புதிய “மரம் கொத்திகளும் ” உடனடியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முகப்புத்தகத்தில் பதிவதை நிறுத்தி தங்கள் முகங்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் உங்கள் முகங்களில் அடுப்பங்கரைச் சீலைத் துண்டுகளைப்போர்த்திக் கொண்டு மூக்கைப் பொத்தியபடி ஊர்களை விட்டு ஓடி ஒளிய வேண்டி வரும் என்பதையும் மன வருத்தமின்றி கூறி வைக்கிறேன்.

எப்போது இந்த மக்கள் விரோத சக்திகளை “கட்சிக்குப் பாதுகாப்பான” தருணம் ஒன்றில் மக்கள் முன் அம்பலப் படுத்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினேனோ அன்று தொட்டு சேர்க்கப்பட்ட பட்டவர்தனமான ஆவணங்கள் என்னிடம் உண்டு. இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும், தனித்துவக் கட்சிக்கும், தத்தமது குடும்பத்துக்கும் இவர்களால் இழைக்கப்பட்ட துரோகங்களை மக்களுக்கு நிரூபிப்பதற்கு முன் இன்ஷா அல்லாஹ். சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும், விஷேடமாக ‘மக்கா, மதீனா ஆகிய றசூலில்லாஹி (ஸல்) அவர்களின் பாதங்கள் பட்ட புனித மண்ணில் இருந்தும் “பத்வா”க்கள் பெறப்படும், இதன் பின் சம்மந்தப்பட்டவர்களின் மனைவிகளுக்கு முதலில் நிரூபிக்கப்படும்.இறுதியாக மக்கள் நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

கட்சியைக் காப்பாற்றுவதற்காக 2004 ஆம் ஆண்டு அன்றைய “இன்டர் கொன்டினன்டல்’ நட்சத்திர ஹோட்டலுக்குள் விசேட பாதுகாப்பு போடப்பட்டிருப்பதையும், கரணம் தப்பினால் மரணம்தான் என்பதையும் பொருட்படுத்தாது நுழைந்து அறையைத் திறந்து ஏ.சி. கூட்டுக்குள் வீடியோ கமராவைப் பொருத்தி படம் எடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்வித்த ஒருவனால் வேறு ஆதாரங்களைத் திரட்டுவதில் என்ன சிரமம் இருந்திருக்கப் போகின்றது?

சிங்கப்பூர், கொழும்பு, பாசிக்குடா நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் யுனிட்டி ப்ளாசா, லேக் ட்றைவ் அபார்ட்மன்ற்ஸ் ஆகியவற்றின் Master key களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். விசேடமாக காவலர்களும், சாரதியும் தூங்கிய பின் சாமங்களில் தனது காரை வி.ஐ.பியிடம் கொடுத்து யாருக்கும் தெரியாமல் பெரியவரே சென்று “கொண்டுவர” உதவிய பாசிக்குடா ஹோட்டல் முகாமையாளருக்கும், புதிய தகவல்களை ஆதாரப்படுத்த உதவிய பம்பலப்பிட்டி “பேர்ள் கிறேன்ட்” ஹோட்டலுக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

நான் நாறவும், மக்கள் முன் தூய்மையாக நடிப்போரை நாறடிக்கவும் தயார். நான், இந்தப் பாதையில் மரணிக்கவும் தயார். நான் மரணித்தாலும்,எனது கொள்கைக் குன்றுகளான நண்பர்கள் அறுவரின் வங்கி லொக்கர்களில் பாதுகாப்பாக இருக்கும் இதே ஆவணங்கள் மக்களுக்கு வழிகாட்டும்.

இது எவ்வளவு பெரிய பதவிகளில் இருப்பவராயினும் அந்நபர்களைக் கணக்கெடுக்காமல் “கட்சியைக் காப்பாற்றுகிற காலம் இது” என்பதைத் கூலிக்கு துள்ளுகிறவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
செயலாளர் நாயகத்துக்குரிய அதிகாரத்தைக் கண்ணைப் பொத்திப் பறித்த அன்று கட்சி கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டது, தாறுஸ்ஸலாம் மர்மங்கள் புத்தகத்தை வாசிக்கும் போது கட்சிச் சொத்துக்கள் ‘அபேஸ்’ பண்ணப்பட்டது புரிகிறது, புத்தியுள்ளவர்களுக்கு கட்சிக் கொள்கைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிகிறது. இவ்வாறான கடைசி சந்தர்ப்பத்திலாவது புறப்பட முடியாது சோம்பிக் கிடந்தால் என்னாவது? அஷ்ரஃப் சேர் சொல்லித் தந்ததால் எங்கே தொடங்கினோம் எனத் தெரிந்த நமக்கு எங்கே போய்ச் சேர்வோம் என தெரியாத பயணத்தில் எதனைக் காணப் போகிறோம்? நரகத்துக்கான பாதை காட்டப்படுகிறது நண்பர்களே!

வரலாறு தெரியாதவர்களை மீண்டும் எச்சரிக்கிறேன்!
கற்றுக்கொள்ள விரும்புபவர்களையும், தெரிந்திருந்து மறந்தவர்களையும் படிக்கவும்-மீள் நினைவுபடுத்தவும் அழைக்கிறேன்! 

மத்தியிலும், பிராந்தியத்திலும் அதிகாரத்திலிருப்போர் தங்களின் கடந்தகால தவறுகளைப் பகிரங்கமாக ஒத்துக்கோண்ட பின்னர் மக்களின் அமானிதமான பதவிகளைத் தொடருமாறு ஆலோசனை கூறுகிறேன். அனைத்தும் அறிந்த அல்லாஹ் போதுமானவன். 

கடந்த 16 வருடங்களும் அரசியலிலும், அரசியலுக்காகவும் நான் செய்த பிழைகள், மற்றும் மற்றவர் செய்த குற்றங்களுக்கு நான் வழங்கிய ஒத்துழைப்புகள் ஆகிய அனைத்துக்குமாக பொது மக்களிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கோருகிறேன்.
நான் இழைத்த பிழைகளுக்கான, இன்னும் மற்றவர் இழைத்த குற்றங்கள் சுத்த ஹறாம் என்று தெரிந்துகொண்டு சுய நினைவுடன் வழங்கிய ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கான பத்வாவினை உலகளாவிய பல பத்வா அமைப்புகளிடம் கேட்டிருக்கிறேன், இன்ஷா அல்லாஹ் கிடைத்தவுடன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவிடமும், ஏனைய தஃவா அமைப்புகளிடமும் காண்பித்து இவர்களின் முடிவையும் பெற்ற பின் ஊடகங்கள் ஊடாகப் பகிரங்கப்படுத்தி அந்த தீர்ப்பின்படி நடந்து கொள்ளச் சித்தமாக இருக்கிறேன். 

நான் வைத்திருக்கும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை விஞ்ஞான பூர்வமாகப் பரீட்சித்து தராதரப் பத்திரத்தைப் பெறுவதற்கு ஆவணங்களை இவ்வாரம் இரு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப உத்தேசித்துள்ளேன். இதுவும் கிடைத்ததும் அப்பளுக்கற்ற உண்மைகளோடு மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ் பூமியில் எனது ஜீவிதம் இருந்தால்! 
1979 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையான 38 வருட கால எனது ஜீவிதம் அல்லாஹ் போனஸாக எனக்குப் போட்ட பிச்சையாகும்.

இதனை எனது உயிலுக்கு எழுதப்பட்ட முன்னுரையாகக் கொள்க.

பஷீர் சேகு தாவூத் 

தவிசாளர் – SLMC