பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம் தலைவர்களை ‘தேசப்பற்றாளர்கள்’ என அறிவிக்குமாறு ஹிஸ்புல்லா கோரிக்கை

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம் தலைவர்களை தேசத்துரோகிகள் என அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து அவர்களை தேசப்பற்றாளர்கள் என அறிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

1796 முதல் 1948 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள தலைவர்களை தேசத்துரோகிகள் என அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அண்மையில் இரத்துச் செய்ததை ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து கொண்ட திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 7 முஸ்லிம் தலைவர்கள் இன்னும் தேசத்துரோகிகள் பட்டியலில் இருக்கின்றனர்.

நாட்டின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்க பிரித்தானியர்களுக்கு எதிராக போராடிய இந்த தலைவர்களை தேசத்துரோகிகள் என அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.