சுமந்திரனை கொலை செய்ய திட்டம் ? முன்னாள் LTTE போராளிகள் சிலர் கைது

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை சதி முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து வடக்கில் புலனாய்வு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் காண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இந்தக் கொலை முயற்சி தொடர்பில்  முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரனின் உயிருக்கு பாரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் பிரதமர் அலுவலகம், சுமந்திரனுக்கு அறிவித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் சுமத்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் சந்தேக நபர்களிடமிருந்து க்ளைமோர் குண்டுகளும் ஏனைய வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் கடந்த 13ம் திகதி தம்மை படுகொலை செய்ய சிலர் திட்டமிட்டிருந்தனர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். GTN