பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்து காப்பாற்றுகிறது….

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது. அதனால் உணவில் காரத்திற்காக கெமிக்கல் சேர்க்கப்பட்ட மசாலா மிளகாய் பொடிகளை சேர்ப்பதற்குப் பதிலாக உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.

பச்சை மிளகாய் காய்ந்து சிவந்து வத்தலாக மாறிவிட்டால் இந்த மருத்துவக் குணங்களும் காணாமல் போய்விடுகிறது. அதனால் பச்சை மிளகாயே உணவுக்கும் உடலுக்கும் நல்லது. பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மிக அதிக அளவில் உள்ளன. நமது உடலுக்கு பாதுகாவலன் போல இது உதவுகிறது. இயங்கக் கூடிய உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து காக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்து காப்பாற்றுகிறது. இளமையை நீட்டிக்க வைக்கும் வல்லமையும் இந்த பச்சை மிளகாய்க்கு உண்டு.

இதில் வைட்டமின் ‘சி‘ அதிக அளவில் உள்ளது. மிளகாயை பயன்படுத்தும் போது மூக்கடைப்பு சரியாவதை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம். இதில் வைட்டமின் ‘ஈ’யும் அதிகஅளவில் இருக்கிறது. இது சருமத்தை பாதுகாக்கவும் எண்ணெய் சுரப்புக்கும் உதவுகிறது. இப்படி பச்சை மிளகாயால் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் எந்தவித கலோரிகளும் இல்லாமல் கிடைக்கிறது. அதனால் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருப்பவர்களும் இதனை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பதால் அவர்கள் பச்சை மிளகாயை உண்பதன் மூலம் அந்த பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உணவு செரிமானம் வேகமாக நடைபெறுகிறது.

மிளகாய் மூளைக்குள் என்டோர்ப்பின்சை உற்பத்தி செய்யக்கூடியது. இது மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கக் கூடியது. நல்ல காரசாரமான உணவு சாப்பிட்டபின் உற்சாகமாக இருந்தால் அது தற்செயலாக நடந்ததல்ல. அதற்குப்பின் இந்தப் பச்சை மிளகாய் இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் பச்சை மிளகாய் மிக நல்லது. இப்படி ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதால் பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

நாம் சாப்பிடும்போது நம் கையில் சிக்கும் பச்சை மிளகாய்த் துண்டுகளை கறிவேப்பிலை போல் ஒதுக்கி விடாமல் அதை சாப்பிட்டாலே போதும். கறிவேப்பிலையும் அப்படித்தான். அதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அதை ஒதுக்காமல் உணவோடு சேர்த்து சாப்பிடுவது மிக மிக நல்லது.