நாளை முதல் மழையுடனான வானிலையும்; முகில் கூட்டம் கொண்ட வானமும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் கடலலையின் சீற்றம் காரணமாக அடுத்த சில நாட்களில், விசேடமாக நாளை 28 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை மற்றும் முகில் கூட்டம் கொண்ட வானமும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வடக்கு, வட மத்திய,கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளைகளில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் சுமார் மணிக்கு 50 கிலோ மீற்றர்வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்த மழை வீழ்ச்சி சமகாலத்தில் நிலவும் வறட்சியான நிலைமையை மாற்றாது என்றும் அந்த மாற்றம் ஏற்பட மேலும் சில தினங்கள் தொடர்ச்சியான மழை காணப்பட வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.