குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி

க.கிஷாந்தன்

அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் – குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற லொறி ஒன்றும் கொட்டகலை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் அட்டன் – குடாஓயா பிரதான வீதியில் நேர்க்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 27.01.2017 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். லொறி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்மணியின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பலத்த காயங்களுக்குள்ளான இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்துக்கு காரணமான லொறியின் சாரதியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.