இளைஞர்கள் தங்களின் ஆளுமைகளை அரசியலுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்த வேண்டும்

அரசியல் சமூக மட்டத்தில் பொறுப்புவாய்ந்ததும் அதிகாரமிக்கதுமான ஒன்றாகும்.முன்னர் சாதாரண பள்ளிவாசலுக்குக் கூட தலைவராக வருவதற்கு பலர் பின்வாங்கினர்.காரணம் சமூகப் பொறுப்பு என்பது இம்மையிலும் மறுமையில் கேள்விகளுக்கும் தண்டனைக்கும் உரிய ஒன்றாகும்.

தகுதியும் அனுபவமும் இருந்தாலும் அந்தப் பதவிவை சுமப்பதற்கு பக்குவமும் தூரநோக்கும் அவசியமாகின்றது.ஏனெனில் ஒரு பிற்போக்கு தலமையின் அரசியல்  பலதலமுறைக்கும் சாபக்கேடாக அமைகிறது.

அனுபவத்தால் அரசியலில் வெற்றிபெற்ற பலர் மத்தியில் அரசியலில் புதிதாக நுழைந்து பெற்ற அனுபவத்தால் சமூகத்தில் வரலாறு படைத்த பலர் உள்ளனர்.

அதேநேரம் பரம்பரை ரீதியாக வசதிபடைத்த சிலர் அரசியலை முதலீட்டு நிறுவனமாகவும்,ஒருசிலர் சமூக சேவைக்கான அங்கீகாரத்துக்கு அதிகாரமாக அரசியலை பயன்படுத்துகின்றனர்.

மேலும் விரைவாகவும்,வியர்வை சிந்தாமலும் உழைக்க வேண்டும் என்பதற்காக அரசியலை ஒருசாரார் தெறிவு செய்கின்றனர்.அதேநேரம் சமூகத்தில் கௌரவம் மற்றும் இழந்த பொருளாதாரத்தை மீளமைக்கவும் சிலருக்கு அரசியல் தேவைப்படுகிறது.

மேலும் பொருளாதார ரீதியாகவும்,சமூகத்தில் அந்தஸ்திலும் இருப்பவர்களுக்கு மக்களின் தூண்டுதலால் அரசியல் துரதிஸ்டவசமாகிறது.

இன்று ஊழல்வாதிகளையும்,கொலைகாரர்களையும்,சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும்,போதைப் பொருள் மாபியாக்களையும்,இதர சமூகத்தின் கருப்பாடுகளை வளர்க்கின்ற பாசறையாக அரசியல் மாற்றம் கண்டுள்ளது.

இதனால் இலட்சியவாதிகளாலும்,சீர்சிருத்த முற்போக்கு தலைவர்களாலும் பாரம்பரியமாக முன்னெடுத்து வந்த அரசியல்??இத்தகைய ஒருசிறு மாபியாக்களின் கைகளுக்குள் சிக்குண்டு சிறைப்பட்டுள்ளது.

யதார்த்தத்தையும்,நடமுறை ரீதியான செயற்பாடுகளையும் முன்வைத்து அரசியலை சீர்படுத்த வேண்டியது காலத்தின் தேவைப்பாடாக உள்ளது.ஒரு பலமிக்கதும் முற்போக்கானதுமான இளைஞர்களின் இரத்தங்களின் வேகம் பாய்ச்சப்பட வேண்டும்.

சமூகத்தில் கல்விகற்றவர்களை விட அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்குமே கௌரவமும் செங்கம்பலமும் கிடைக்கிறது.

கல்வி அறிவு தேவைப்பாடாக இல்லாத போதும்,அரசியல் தலமைத்துவம் மிகவும் கண்ணியமானதும் மரியாதைக்கு உரியதாகவும் மதிக்கப்பட்டது.

இந்த நிலைமாற்றத்தால் தினம் நூறு அரசியல்வாதிகள் சமூகத்தில் முளைக்கின்றனர்.எதையும் இழந்டாவது அல்லது எதையும் செய்தாவது அரசியலில் இறங்குவது ஒன்றே நோக்கமாக உள்ளது.இந்த நோக்கத்தை நிறைவு செய்ய சமூகத்தில் அதிஉச்ச மேய்ச்சலை இவர்கள் செய்கின்றனர்.

சமூகத்தில் உருவான இந்த நடமுறைக்கு முரணான மாற்றம்,அந்த சமூகத்திற்கு எதிராக மாறியுள்ளது.சுத்தமான காற்றும்,சுகமான தூக்கமும் இழந்த சமூகமாக மாறியுள்ளது. குடும்பச் சூழலில் கூட கட்டுக்கோப்பற்ற நிலமை உருவாகி உள்ளது.

அரசியலை காலை எழுந்தது முதல் உறங்கும் வரையான மனித செயற்பாடுகள் அனைத்திலும் மனிதன் உள்வாங்குகிறான்.அவனுக்குள் தெறியாமலே ஓடுகின்ற போதையான உணர்வாக அரசியலை நுகர்கிறான்.தனக்குத் தேவையானதை அடையவும்,மற்றவர்களுக்கு கிடைக்காமல் தடுக்கவும் ஒரே அரசியலை துணையாக்குகிறான்.

ஆகவே இஸ்லாமிய சூழலில் வாழ்கின்ற சமூக அமைப்பில் மறுமைக்கான தேடல்கள் நிறைய உண்டு.சமூகத்தில் கற்றுக் கொள்ளவும்,கற்பிக்கவும் நிறைய விடயங்கள் உண்டு.

அரசியலை எவரும் தெறிவு செய்வதோ,?அல்லது முன்வருவதோ தவறாக நோக்கப்படலாகாது.இருந்தும் இத்தகைய தலமைகளை சமுதாயம் அடையாளம் கண்டு முன்நிறுத்த வேண்டும்.இல்லையேல் இவ்வாறான பொறுப்பு வாய்ந்தவர்கள் அரசியலை பொறுப்பேற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

வெறுமனே விமர்சனங்களாலோ,,ஒதுங்கிக் கொள்வதாலோ இந்த மாபியாக்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளிவைக்க முடியாது.

சமூகத்தில் விழிப்புணர்வு,குறிப்பாக இளைஞர்கள் சமூகத்தின் சமகால செயற்பாட்டாளர்களாக மாறுவதோடு,தங்களின் ஆளுமைகளை அரசியலுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்த வேண்டும்.

இன்று அரசியலை பற்றிப் பேசுவதும் எழுதுவதுமே சுவார்ஷியமாக பலருக்கு உள்ளது.அதற்கு தயாராகுவது என்பது அல்லது பிறரை தயார்படுத்த முயற்சிப்பது கேள்விக்குறியாக உள்ளது.ஏனெனில் எவரும் இலவசமாகவும்,எந்த  நேரமும் வந்து போகக் கூடிய விபச்சார மடமாக அரசியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சிறந்த நற்பண்பும் ,,அர்த்த பூர்வமான உணர்வுகளும்,முற்போக்கு சிந்தனையும் உடைய பல இளைஞர்கள் சமூகத்தில் இன்னும் உள்ளனர்.இவர்களை அடையாளம் கண்டு சமூகத்திற்கு பயனுடையவர்களாக அடையாளப்படுத்த வேண்டும்.

துரதிஸ்டவசமாக இவர்களை இருக்கின்ற அரசியல்வாதிகள் மிகவும் சாணாக்கியமாக பயன்படுத்தி சந்தர்ப்பம் பார்த்து உதவாக்கறையாக்கும் காரியத்தை செய்கின்றனர்.சமூகத்தில் முற்போக்கான இளைஞர்களை இணைப்பாளர்,கொந்தராத்துக்காரர்கள் மற்றும் உள்ளூராட்சி வேட்பாளர்கள் என்ற மாயவலைக்குள் உள்வாங்கி சீரழிக்கின்றனர்.தங்களின் பதவிக்கு சவாலாக இல்லாமலும் தங்களின் அரசியலுக்கு வக்காலத்து வாங்குபவர்களாகவும் இளைஞர்கள் உபயோகிக்கப்படுகின்றனர்.

இதனால் அரசியல் பற்றிப் பேசுகின்ற அல்லது அரசியல் விரும்புகின்ற இளைஞர்கள் எவரேனும் ஒரு அரசியல்வாதிக்கு வங்காலத்து வாங்குவதும், எவரேனும் ஒருவரை வசைபாடுவதுமே நாகரீகமாக மாறியுள்ளது.

தனது திறமை மற்றும் ஆளுமைகள் மீது நம்பிக்கையற்றதாக இளைஞர் சமூகம் மாறிவருகிறது. பணமும் அரசியல் தலமைகளின் ஆசீர்வாதமும் மட்டுமே அரசியலுக்கு தேவையாக உள்ளது. சமூகத்தின் தற்போதைய சவால்கள் மற்றும் சீர்கேடுகளை பயனுள்ள முறையில் எதிர் கொள்ளக் கூடிய செயற்பாடுகளை இளைஞர்கள் முன்னிலைப்படுத்த வேண்டும்.

 

FAHMY MOHIDEEN 

SOLICITOR