மடியில் கனமில்லையென்றால் பயமெதற்கு ? சம்பந்தப்பட்டவர்கள் பதில் தருவார்களா ?

 

அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற இனம் தெரியாத குழுவினரால்  “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” எனும் புத்தகமானது வெளியிடப்பட்டிருந்தது.இப் புத்தகத்தில் கிழக்கு முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் பிரதான குற்றவாளியாகவும் அமைச்சர் ஹக்கீம்,முன்னாள் கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர்,பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் ஆகியோர் இக் குற்றத்திற்கு துணை போனவர்கள் என்ற வகையிலும் அமையப்பெற்றிருந்தது.

இப் புத்தகத்தை வாசிக்கின்ற போது அதில் கூறப்பட்ட ஒவ்வொரு விடயங்களுக்குமான ஆதாரங்கள் பக்காவாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.இருந்தாலும் இப் புத்தகமானது ஒரு குழுவின் பெயரை போட்டு வெளியிடப்பட்டிருந்தாலும் அவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது.அவ்வாறானால் அமைச்சர் ஹக்கீம் யாருக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற வினா எழலாம்.அவரும் அநோமோதய புத்தகம் வெளியிட்டு பதில் அளிக்க வேண்டுமா என்று கேட்டால் அதற்கு அவருக்கு அவசியமில்லை என்று ஒரு வார்த்தையிலேயே மிக இலகுவாக கூறி விடலாம்.

இதில் உள்ள ஒவ்வொரு விடயத்திற்குமான ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளதன் காரணமாக இவ்விடயத்தில்  அனைவரும் கவனத்தை செலுத்த வேண்டும்.இக் கட்டடத்தை கட்டியதில் பொது மக்களின் பணம் உள்ளது.இதன் காரணமாக இது தொடர்பில் கேள்வி கேட்டும் உரிமை யாவருக்கும் உண்டு.அதனை கொள்ளையிட்டுச் செல்ல எக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.இதனை ஒருவர் வெளியிட்டிருந்தால் அவருக்கு மாத்திரமே உரியவர்கள் பதில் அளிக்க கடமைப்பட்டிருப்பார்கள்.இப் புத்தகத்தின் மூலம் அனைவரும் கேள்வி கேட்கப் போகிறார்கள்.இப்போது அனைவருக்கும் பதில் வழங்க வேண்டும்.

தாருஸ்ஸலாம் பற்றிய மர்மங்கள் இப் புத்தகத்தால் மாத்திரம் மக்களிடையே கேள்விக்குட்படவில்லை.இப் புத்தகம் வெளிவருவதற்கு முன்பும் பலரும் கேள்வி எழுப்பியது தான்.அண்மையில் மு.காவின் தவிசாளரான பஷீர் சேகுதாவூதும் இது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.அவர் கேட்பதற்கு முன்பும் பலரும் கேட்டிருந்தனர்.அதாவது முகவரி தெரிந்த  நபர்கள் கேட்ட போதும் உரியவர்களால் பதில் வழங்கப்படவில்லை.அப்படி வழங்கப்பட்டிருந்தால் இக் கத்தரிக்காய் ஏன் முற்றி சந்தைக்கு வந்திரிக்கப் போகிறது?

தற்போது இவ்விடயமானது சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளதால் இவ் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளித்து முற்றுப் புள்ளி வைப்பது சிறந்தது.இவர்கள் எங்கு சென்றாலும் யாரைச் சந்தித்தாலும்  இக் கேள்விகள் அவர்களை வாழ் நாள் பூராக தொடரும்.இக் கரும் புள்ளி அவர்களை சந்ததி சந்ததியாக தொடரும். மடியில் கனமில்லையென்றால் பயமெதற்கு? 

இப் புத்தகம்  தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.இருந்தாலும் அவைகள் உறுதியாக நம்பும் ஊடகங்கள் அல்ல.இப் புத்தகமானது இன்று முஸ்லிம் சமூகத்திலுள்ள மிகப் பெரும் புள்ளிகளை இழிவுபடுத்தி இருப்பதால் இது தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும்.இதற்கான காத்திரமான நடவடிக்கைகளில் மு.காவினர் இறங்கவும் வேண்டும்.

அவ்வாறான ஒரு நிலை வந்தால் இவ்விடயங்கள் தொடர்பான உண்மை தன்மை மிக அழகாக சந்தைக்கு வரும்.இதனை வெளியிட்டவர்கள் யார் என்று மிகச் சாதாரணமாகவே ஊகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிவதால் அவர்களை கண்டு பிடிப்பது அவ்வளவு பெரிய விடயமுமல்ல.இப் புத்தகத்தில் வாய் பேச்சு ரீதியான சில விடயங்களை அவதானிக்க முடிகிறது.இதனை எவ்வாறு நிரூபிக்கப் போகிறார்கள் என்பது சந்தேகமாக இருந்தாலும் இதனை எழுதியவர்கள் சட்ட ரீதியான பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டே செய்திருப்பார்கள்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.