கடந்த அரசாங்கத்தைப் போல தம்மால் அடாவடித்தனமான முறையில் விசாரணைகளை நடத்தமுடியாது: ராஜித

கடந்த அரசாங்கத்தைப் போல தம்மால் அடாவடித்தனமான முறையில் விசாரணைகளை நடத்தமுடியாது என அமைச்சரவை இணை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடகாலமாகியுள்ளபோதும், முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் ராஜித, ஆணைக்குழுக்கள் தொடர்பில் பிரச்சினைகள் உண்டு. நாம் அதை ஏற்றுக்கொள்கின்றோம். பாரதூரமான விசாரணைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

நீதிக்கட்டமைப்பில் ராஜபக்ஷ நிர்வாக நடைமுறையே இருந்து வந்தது. இது தொடர்பில் நாம் புதியவர்களை நியமித்தோம்.

சமகால நல்லாட்சி நிர்வாகத்தில் ராஜபக்ஷ நிர்வாகத்தை போன்று முன்னாள் இராணுவத்தளபதியை இராணுவ வீரர்களைக் கொண்டு தூக்கிச்சென்று விசாரித்ததை போன்று எம்மால் அடாவடித்தனமான விசாரணைகளை நடத்தமுடியாது என்று தெரிவித்துள்ளார்.