சல்மானிடம் அதிகாரத் தொனியில் எதனையும் கூற முடியாத திரிசங்கு நிலையில் ஹக்கீம்

இப்றாஹீம் மன்சூர்

 

 அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஒன்றை வைத்துக் கொண்டு பலருக்கும் எத்தம் காட்டி வருகிறார்.அட்டாளைச்சேனை மக்கள் திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்ட போது அதனை பார்த்துக்கொண்டிருந்தனர்.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் கிடைக்கப்போகிறதென்றால் மாத்திரம் கொதித்தெழுகின்றனர்.இது எந்த வகையிலும் நியாயமானதல்ல.

ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டாலும் சரி அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்டாலும் சரி அவர்கள் அதன் மீது ஏதோ ஒரு வகையில் உருத்துடையவர்கள்.இப் பதவியினை வகிக்க பாராளுமன்ற உறுப்பினர் சல்மானுக்கு தற்காலிகமாக வழங்கியிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அவர் தேசியப்பட்டியல் பகிர்வில் சிந்திக்கப்படும் நபர்களில் ஒரு மூலையில் கூட இல்லை.வருவோர் போவோர் எல்லோருக்கும் தேசியப்பட்டியலை வழங்க அமைச்சர் ஹக்கீமிடம் தேசியப்பட்டியல் எஞ்சி கிடக்கின்றதா? 

தற்போதைய நிலைகளை வைத்து பார்க்கும் போது ஹசனலியின் பக்கமும் ஏதோ ஒரு வகையில் சரி செய்யப்பட்டுவிட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.அது தேசியப்பட்டியல் சமரசம் என்றால் அமைச்சர் ஹக்கீம் காலம் தாழ்த்தாது அவருக்காவது தேசியப்பட்டியலை வழங்க வேண்டும்.இல்லையென்றால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை வழங்க வேண்டும்.அதற்கும் விருப்பம் இல்லையென்றால் தேசியப்பட்டியல் வழங்க சிந்திக்கும் வேறு யாருக்காவது தேசியப்பட்டியலை வழங்க வேண்டும்.அதற்கும் இல்லையென்றால் நிரந்தரமாக சல்மானுக்கு வழங்கி மக்களுக்கு எத்தம் காட்டாது இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இனியும் காலம் தாழ்த்தாது அமைச்சர் ஹக்கீம் உடனடியாக சல்மானின் தேசியப்பட்டியலை இராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும்.சல்மான் தாருஸ்ஸலாமின் மர்ம கதைகளை நன்கு அறிந்தவர் என்பதால் இந் நிலையில் அமைச்சர் ஹக்கீம் அதிகாரத் தொனியில் அவரிடம் எதனையும் கூற முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு அஞ்சியே அவரிடம் அமைச்சர் ஹக்கீம் இராஜினாமா செய்ய உத்தரவிடாமல் இருக்கலாம்.