அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 25 பேர்; கூடிய விரைவில் எதிர்க்கட்சியுடன் இணைய எதிர்பார்த்திருப்பதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 25 பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முறையில் நகர்ந்து வருவதாகவும் இவர்கள் கூடிய விரைவில் எதிர்க்கட்சியுடன் இணைய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அந்த அரசாங்கத்தில் வர்த்தகதுறை அமைச்சராக பதவி வகித்தார்.

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் வழக்கு விசாரணைகளும் நடந்து வருகின்றன.