கிடைத்த தொழிலை வைத்து இன்னும் முன்னேறுவதற்கு வழிசெய்யுங்கள்: அமைச்சர் ரிஷாட்

 

சுஐப் எம் காசிம்

மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின்; மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். 

பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 62 பரிசோதகர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் இன்று காலை (2017.01.21) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிந்தக்க எஸ் லொக்குஹெட்டி, அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன, பணிப்பாளர் நாயகம் ஜீவானந்த உட்;பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

அமைச்சர் மேலும் கூறியதாவது

அரசாங்கத் தொழில் கிடைத்து விட்டால் நமக்கு நிம்மதி. சொகுசாக இருந்து வாழ முடியும் என சிலர் எண்ணுகின்றனர். தொழில் கிடைத்ததிலிருந்து ஓய்வு பெறும்வரை இப்படியே சமாளித்து விட்டு பின்னர் பென்சன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்ற மனோபாவம் சிலரிடம் மேலோங்கியிருக்கின்றது. இன்னுமொரு சாரார் கிடைத்த தொழிலை அடிப்படையாக வைத்து முயற்சிகளை மேற்கொண்டு அந்த நிறுவனத்தில் உச்சக்கட்ட நிலைக்கு செல்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தமது இலக்கை அடைவதுடன் மக்களுக்கும் தனது அறிவு அனுபவங்ளைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை கிடைக்கப் பாடுபடுகின்றனர். தொழிலும் பதவியும் கிடைத்து விட்டால் போதுமென்று இருந்துவிடாது கிடைத்த தொழிலை வைத்து இன்னும் முன்னேறுவதற்கு வழிசெய்யுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் இந்தத்தொழில் மிகவும் பொறுப்பு வாய்ந்தது. பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் குற்றவாளிகளை பாதுகாக்க முற்படாதீர்கள். மனச்சாட்சியே சிறந்த நீதிபதி பாவனையாளர்களுக்கு அநியாயம் நிகழ்ந்தால் தவறு செய்பவர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள். 

 

நுகர்வோர் பாதுபாப்பு அதிகார சபை பாவனையாளர்களின் உரிமைகளையும், நன்மைகளையும் பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கபட்ட போதும் வர்த்தகர்களின் நலன்களையும் பேணுகின்ற ஒரு நிறுவனமாகும். எனவே விசாரணை அதிகாரிகளான நீங்கள் நடுநிலை நின்று பணியாற்ற வேண்டும். எதிர்வரும் காலங்களில் மேலும் விசாரணையாளர்களை நியமித்து மக்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.