மெரினா கடற்கரையில் குளிர் காற்றிற்கு நடுவே 20 மணி நேரத்தை கடந்து இளைஞர்கள் போராட்டம் தீவிரம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மெரினாவில் இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றது. 

போராட்டம் காரணமாக மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கடற்கரை சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடற்கரை சாலைக்கு வர வேண்டாம் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு விநியோகம் செய்து வருகின்றனர்.