பான் கி மூன், தென் கொரியா நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும்..?

தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றும், புதுப்புது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.

தனது தோழியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிபர் பார்க் கியுன் ஹே, இவ்விவகாரத்தில் மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் அவரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.

பின்னர், அதிபர் பார்க் கியுன் ஹேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததையடுத்து, பாராளுமன்றத்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் விரைவில் முடிவு செய்ய உள்ளது.

இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கு தென் கொரியா மக்கள் தயாராகிவரும் நிலையில், அதிபர் பதவிக்கு தகுதியானவர்கள் யார்? என்று அந்நாட்டின் பிரபல பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில் பதவி விலகிய பான் கி மூன் இந்த தேர்தலில் போட்டியிட ஆதரவு பெருகி வருவதாக தெரியவந்துள்ளது.

தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியை சேர்ந்த மூன் ஜாயே என்பவருக்கு 26.1 சதவீதம் பேரின் ஆதரவும், பான் கி மூனுக்கு 22.2 சதவீதம் மக்களின் ஆதரவும் உள்ளதாக இந்த கருத்து கணிப்பு சுட்டிக் காட்டுகிறது.

இதற்கிடையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் பார்க் கியுன் ஹே-வை பான் கி மூன் இன்று காலை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நாட்டின் தென்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கோள்ள திட்டமிட்டுள்ள பான் கி மூன், பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்னர் அதிபர் பார்க் கியுன் ஹே மீது அதிருப்தி அடைந்துள்ள மேலும் பல மக்களின் ஆதரவு பான் கி மூனுக்கு கிடைக்கும். இதையடுத்து, விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவர் குதிப்பார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

எனினும், தனது எதிர்காலத்தைப் பற்றி இன்னும் திட்டமிடவில்லை தெரிவித்துவரும் பான் கி மூன்(72), முதலில் நாட்டு மக்களை நேரில் சந்தித்து அவர்களின் மன ஓட்டத்தை நன்கறிந்த பின்னர் நிச்சயமாக அதிபர் தேர்தலில் களமிறங்குவார் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.