சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லியைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்..

 

 
கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.  
 
* கொத்தமல்லியில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் இ இதில் நிறைவாக உள்ளது.
 
* செரிமானத்துக்கு உதவும் என்சைம்கள் சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி தூண்டுகிறது. இதன்மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லியைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
 
* இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்கள், அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் பார்வைக்  குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. கண்ணில் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தைப் போக்குகிறது. வயதாகும்போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைத் தாமதப்படுத்துகிறது.
 
* கொத்தமல்லியைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமானப் பிரச்சனை பெரும் அளவுக்குக் குறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. வாந்தி, குமட்டலைப் போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.
 
* கொத்தமல்லியில் உள்ள ஒலியிக், பாமிடிக், ஸ்ட்டியரிக், அஸ்கார்பிக் அமிலங்கள் மற்றும் (வைட்டமின் சி) ஆகியவை ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறையச்செய்யும். ரத்தக்குழாயின் உட்சுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால், மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.