அரசாங்கத்தை உடைக்கவோ மீள அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம்: ஜனாதிபதி

file image

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிரந்தர யுகம் திட்ட வெளியிட்டு விழாவுக்காக இந்த வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் மாத்திரமே உரையாற்றினர். 

மேலும் இந்த திட்டத்தை செயற்படுத்த பேராசிரியர் மொஹான் சில்வா தலைமையில் புத்திஜீவிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் அரச அதிகாரிகளும் இணைந்து 2030 ஆம் ஆண்டு வரை இலங்கையின் இலக்குக்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை செயற்படுத்துவார்கள் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மத்தியில் அரசாங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறியுள்ளதன் மூலம் அந்த அமைச்சர்கள் ஊடாகவே செய்தியை வழங்கி இருப்பதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.